நவம்பர் 06, 2008

மலையகம்

இன்றைய நாட்களிலும்,பொதுவாக 80களின் பின்னரும் உலக அரங்கில் இலங்கை என்றால் முதன்மை நிலை பெறுவது தமிழர் பிச்சினை தான். அதிலும் விடுதலைப்புலிகள்,தமிழர் போராட்டம் பற்றிதான் தான்.

ஆனால் இப்போது தான் இலங்கையில் இன்னொரு சமூகம் தமிழை தாய்மொழியாக கொண்டாலும், இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்து விட்டு தான் மட்டும் கூனி குறுகி நிற்கிற அல்லது கைவிடப்பட்ட அல்லது காட்டிக்கொடுக்கபட்ட அவல நிலை பற்றி உலகிற்கு தெரிய வர ஆரம்பித்திருக்கிறது.

குறிப்பாக இறக்குவானை நிர்ஷன் புதிய மலையகம் என்ற தலைப்பில் தரும் மலையகம் அதன் மக்கள், அவர்கள் வாழ்கை, பற்றிய விடயங்கள் நிச்சயம் மலையகம் சாராத தமிழர்கள் உலகத்தின் எந்த பகுதியிலிருந்தாலும் தெரியவே வாய்பில்லை.

பதிவுகளை பார்க்க புதிய மலையகம் செல்லவும்.

இது பெரும் மகிழ்சிக்கும் போற்றுதலுக்கும் உரிய விடயம். சமூகம் விட்டு விடுதலையடைய விதைக்கபடுகிற விதை. அல்லது சமூக மேம்பாட்டிற்கான மற்றுமோர் கல். இதற்கு தமிழ் வலைபூக்கள் பெரும் பங்களிப்பை செய்வது மறுக்கமுடியாதது.

இதில் அநேகர் தம் பங்களிப்புகளை உலகத்தின் பார்வைக்கு வைப்பதால், இருளில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தின் அவலம் வெளிச்சத்திற்கு வருகிறது. இனி வரும் காலங்களில் இம்மக்களின் வாழ்வுயர அவர்களின் முகவரி தேடி வெளிச்ச ரேகைகள் வரவிருக்கிறது என்பதை நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது.

இதற்கு கோடு போடவர்களுக்கும் அதை பாதையாக மாற்றியவர்களுக்கும் அதையே இப்போது ரோடாக மாற்றியவர்களுக்கும் வரும் காலங்களில் இதை நெடுஞ்சாலையாக்க போகிறவர்களுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகளும் வாழ்த்துகளும்.

நம் பிரச்சினைகளை பேசுகிறோம் அவலங்களை முன் வைக்கிறோம் என்ன செய்யலாம் என்பது பற்றியும் கொஞ்சம் பேசுவோம்.

முதலில் நமது சமூகம் எப்படி விடுதலைபெறலாம் என்பதை பற்றி கொஞ்சம் கோடு போடலாம் இதில் அநேக விடயங்கள் தவிர்க்க முடியாத படி ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்திருக்கின்றன, ஒன்றை விட்டு ஒன்றை தீர்க்கமுடியாத பெரும் சிக்கல்கள் இருக்கின்றன என்பது மறக்கமுடியாது.

என் அறிவிற்கு எட்டியவரையில் எனக்கு தெரிந்தவைகளை என்ன செய்யலாம் என்று ஒவ்வொன்றாக எழுத முனைகிறேன். நம் மக்களின் சமூக அக்கறையுள்ளவர்கள் மற்றும் தலைவர்கள் கண்களில் பட்டால் கொஞ்சம் விவாதித்து பாருங்கள்.

முதலில் இம்மக்களின் வாழ்வாதாரம் நிரந்தரப்படத்தபடுல் முக்கியம்.
மலையக மக்கள் அனைவருமே பெருந்தோட்ட பயிர்செய்கை பிரிவில் அடங்குகிறவர்கள், தேயிலை, இறப்பர், மற்றும் தென்னந்தோட்டங்களில் தான் பணிபுரிகிறார்கள். இவர்களது ஊதியம் அதாவது வருவாய் என்பது ஒரு நிரந்தரமற்றது. வேலைக்கு போனால் சம்பளம் இல்லையேல் இல்லை என்ற நிலை.

பெருந்தோட்ட தொழிற்துறை அரசாங்கத்தின் கைகளில் இருந்த காலத்தில் இம்மக்கள் பொருளாதார நிலையில் தன்னிறைவை எட்டாவிட்டாலும், இல்லை என்ற சொல்லிற்கு இடமில்லாது வாழ்ந்தார்கள். அந்த காலங்களில் அதாவது 80களின் காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தை சற்று நிறுத்தி, தம்மை திரும்பி பார்க்க வைக்ககூடிய நிலையில் இச்சமூகம் இருந்தது என்றால் மிகையில்லை. நடந்த போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் என்பன இதற்கு சான்றாகும்.

இதன் காரணமாக அன்றைய அரசியல் இவர்கள் வாழ்கையில் விளையாட தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது வாழ்கையை அவர்களது திட்டத்தை ஆட்டி பார்க்க திட்டமிடப்பட்டது. இத்தனைக்கும் இலங்கை உலகிலேயே தேயிலை ஏற்றுமதியில் முதன்மை நாடாக திகழ்ந்தது மேலும் இலங்கை தேயிலைக்கு தான் உலக சந்தையில் நல்ல விலை கிடைத்திருந்தும்.

83ல் இடம் பெற்ற இலங்கையின் இனக்கலவரத்தில் தென் மாகாணம், ஊவா மற்றும் சப்பிரகமுவா மாகணத்தில் பெருந்தோட்ட துறையில் இருந்த தொழிலாளர்கள் அநேகர் கொலைசெய்யப்பட்டார்கள், விரட்டியடிக்க பட்டார்கள் அல்லது இடம்பெயர சூழ்நிலையால் நிர்பந்திக்கபட்டார்கள். தோட்ட உரிமையாளர்கள் தமிழராய் இருந்தபட்சத்தில் மொத்தமும் சூரையாடப்பட்டது.

இலங்கை அரசின் பொருளாதாரம் தேயிலை ஏற்றிமதியில் தங்கியிருக்க கூடாது, என்ற கருத்து அப்போதே இலங்கையில் ஆளும்வர்க்கத்தினருக்கு ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக தேயிலை தோட்டங்களை தனியார் மயப்படுத்தியது…. அநேக தோட்டங்கள் மூடப்பட்டன.

பெருந்தோட்டங்களில் ஒவ்வோர் தோட்டத்திலும் அதன் விளைநில பரப்பளவிற்கு தகுந்த விகிதாசாரத்தில் தான் தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்பது அடிப்படை, அப்போது தான் அங்குள்ள மக்களுக்கு மாதம் முழுவதுமாக (அதாவது 26 நாட்களும்) வேலை பார்க்க கூடிய நிலையிருக்கும். தொழிளாளர் அளவு அதிகம் ஆகும் போது அனைவருக்கும் மாதம் முழுதும் வேலை தருதல் என்பது இயலாத ஒன்றாகிறது…. தினக்கூலி என்ற அடிப்படையில் அம்மக்கள் இருக்கும் போது மாதத்தில் வேலை நாட்கள் குறைந்தால் என்ன நடக்கும் என்பது இங்கு சொல்லித்தெரிய தேவையில்லை.

ஆக இந்த நிலை அங்குள்ள நிர்வாகத்திற்கு மிகுந்த சாதகமாக மக்களை பிரித்தாளுவது என்ற ஒரு உந்து சக்தியை கொடுக்கிறது. இந்த வகையில் தோட்ட நிர்வாகத்திடம் தொழிலாளர்களின் சுதந்திரம் உரிமை என்பது முற்று முழுதாக அடகு வைக்கப்படுகிறது.

மேலும் தனியார் மயப்படுத்திய பின்னர் சிறந்த முகாமைத்துவம் மறுசீர் அமைப்பு என்பன துளியும் அற்று போய்விட்டன. மேலும் தனியார் மயப்பட்ட தோட்டங்களில் தேயிலை தவிர்ந்த மாற்று பயிர்களை தேயிலை விளை நிலங்களில் பயிர் செய்வது என்ற புதிய உத்தி கையாளப்பட்டது. ஆகவே இதனாலும் அந்தந்த தோட்டங்களில் வசிக்கும் தொழிலாளர்களின் மொத்த வேலை நாட்கள் குறையும்.

ஆக அம்மக்களின் தொடர் வருவாய் ஆட்டம் கண்டு விடும். ஆக வாழ்வியல் போராட்டத்திற்கு மத்தியில் மறுமலர்ச்சி பற்றி எப்படி ஒரு சமூகம் சிந்திக்கும்?

அதை சிறப்புற செய்து முடித்திருக்கிறது இலங்கையின் ஆளும் வர்க்கம். அதில் பெரும் சோகம் என்ன வென்றால் இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் சங்கங்களும் விலை போனது தான் சோகத்தின் உச்சம்.

ஒன்றாக இருந்த தொழிற்சங்கங்கள் துண்டாடப்பட்டன. (இது வேறு கதை இதை வேறாக எழுதலாம்). போதாதற்கு அதற்குள் எத்தனை பிரிவுகள் கட்சிகள் அதற்குள் எத்தனை போட்டிகள் பொறாமைகள், தமிழினத்திற்கே சாபமாய் போன ஓற்றுமையின்மை இத்தியாதி இத்தியாதி.

என்ன செய்யலாம்?

முதலில் இம்மக்களின் ஊதியம் நிரந்தரப்படுத்தப்படல் அவசியம். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மலையக மக்களின் ஸ்திரபட்ட வருவாய் என்கிற முதல் அம்சத்திற்கான வழிதிட்டங்கள் வகுக்கபடுதல் அவசியம்.

தொடரும்.......!

3 கருத்துகள்:

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

வணக்கம்,
மலையகத்தில் தேயிலை வருமானத்தின் வீழ்ச்சி பற்றி தகவல் திரட்ட இணையத்தில் உலாவியபோது தங்களது வலைப்பக்கம் கண்ணில் பட்டது.

மனம் நிறைந்த நன்றிகள் உங்களுக்கு.

பதிவுகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். தரமானவை பலவற்றை சேமித்து வைத்திருக்கிறேன்.

தொடர்பு கொள்ளுங்கள். தங்களைப் போன்றவர்களின் தொடர்பினால் இன்னும் நிறைய சாதிக்க முடியும் என நினைக்கிறேன்.
ramnirshan@gmail.com

geevanathy சொன்னது…

வணக்கம்

தேவையான ஒரு தேடலில் ஈடுபற்றி இருக்கிறீர்கள்...
நிறைய வாசித்திருக்கிறேன் மலையகம் பற்றி... இருந்தும் அண்மையில் எனது சக நண்பன் பணிபுரியும் ஒரு மலையக பின்தங்கிய வைத்திய சாலைக்குச் சென்றபோது அங்குள்ளவர்களோடு நெருங்கி பழக முடிந்தது.... நெஞ்சு வலித்தது .....அவர்களது அன்றாட வாழ்க்கைபற்றி அறிந்து....

////முதலில் இம்மக்களின் ஊதியம் நிரந்தரப்படுத்தப்படல் அவசியம். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மலையக மக்களின் ஸ்திரபட்ட வருவாய் என்கிற முதல் அம்சத்திற்கான வழிதிட்டங்கள் வகுக்கபடுதல் அவசியம். ///

கட்டாயம்...

அன்புடன் ஜீவன்...

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

தொடர்ந்து எழுதவுள்ளேன்,
வேலை பளு காரணமாக சற்று இடைவெளி விழுந்திருக்கிறது….
அவ்வளவுதான்.

அன்புடன்
ஜோசப் இருதயராஜ்