ஆகஸ்ட் 31, 2005

இதோ ஒரு உண்மை சம்பவம்

அவசர காலசட்டமும் தமிழர் படும் பாடும்
என்ற பதிவின் தொடர்ச்சி.....

1996 ஏப்ரல் மாதம் 27ம் திகதி.

நான் இசைக்குழுக்களில் அங்கம் வகித்த காலங்களில், நானும் எனது நண்பர் ஒருவரும் ( இருவரும் சகோதரர்கள் மாதிரி). எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்து தான் எது செய்தாலும் இருவரும் தான்,.... அந்த காலங்களில் எங்கள் இரு வீடுகளிலும் நாங்கள் இருவரும் வாங்காத ஏச்சு கிடையாது, சும்மா மியூசிக், மியூசிக்கென்று வெட்டியா ஊர் சுத்துரோம் என்று, இருவரும் தொழில் செய்தாலும் மனசு எப்போதும் இசைபற்றிதான்....

உண்மையில் "அது ஒரு நிலா காலம்" தான்...... சரி அது ஏன் இப்போ விடயத்துக்கு போவோம்....

சரி!

மேற்சொன்ன தினத்தன்று கொழும்பிற்கு ஒரு இசைநிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொள்வதற்காக கிடைத்த அழைப்பை ஏற்று வந்திருந்தோம். 29ம் திகதி நிகழ்ச்சி ஏற்படாகியிருந்தது, 27ம் திகதி காலை இருவரும் நிகழ்ச்சியின் ஒத்திகைக்கு சென்றுவிட்டு மாலை எனது நண்பரின் மூத்த சகோதரர் வீட்டிற்கு சென்றோம். கொழும்பு வந்தால் வழமையாக அங்கு தான் தங்குவது வழக்கம். அவர் கொழும்பில் ஆடைகள் வியாபாரத்தில் உள்ளவர் மோதரை பகுதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். இத்தனைக்கும் அந்த வீட்டின் சொந்தகாரர்கள் பெரும்பான்மை சிங்கள சமூகத்தை சோந்தவர்கள். எங்களுக்கு பக்கத்து வீட்டில் தான் வசித்து வருகிறார்கள்.

வீட்டிற்கு போனால் அங்கே அண்ணியின் முதல் பிரசவத்திற்காக அவர் தனது செந்த இடமான தலவாகலைக்கு போக வேண்டி, (அதாவது எங்கள் வீட்டுக்கு), கிளம்பி கொண்டிருந்தார். சரியென்று அவரை வழியனுப்பிவிட்டு நாங்கள் இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு, சுயாதீன தொலைக்காட்சியில் (ITN) ஒளிபரப்பான ஒரு தமிழ் திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தோம் பார்த்து கொண்டிருக்கையில், ஒரு 12.30 நடு இரவு திடீரென எங்கள் வீட்டை சுற்றி காலடியோசைகள்..... நாங்கள் என்ன ஏது என்று யோசித்து முடிவெடுக்கும் முன் வீட்டு கதவு தட்டப்பட்டது திறந்தோம் திடு திடுவென் போலீசார் உள்ளே புகுந்தார்கள். எங்களின் அடையாள அட்டையை கேட்டார்கள் கொடுத்தோம், எங்கே பதிவு செய்த கடிதம் என்றார்கள் நாங்கள் உண்மை நிலையை எடுத்து சொன்னோம்.... பக்கத்து வீட்டார் ( எங்கள் வீட்டு சொந்தக்காரர்) அவர்களும் வந்து எங்களை பற்றி விபரம் சொல்லியும் யாரும் கேட்கவில்லை,

மாறாக அவர்களை ஒரு போலீஸ்காரர் திட்டுகிறார் " உம்பலா தமாய் கொட்டியின்னட சப்போர்ட் கரண்ணே! " அதாவது நீங்கள் எல்லாம் தான்டா புலிக்கு ( த.வி.பு) உதவி செய்கிறீர்கள் என்று.....

இன்னொரு போலீஸ் எங்களை அடிக்க கை ஓங்கியது...., யார் செய்த புண்ணியமோ அடிக்கவில்லை. நாங்கள் கட்டியிருந்த லுங்கி, மேலே போட்டிருந்த டீ சேர்ட்டுடன் கையில் எங்கள் அடையாள அட்டையை பிடித்தபடி போலீஸ் பஸ்சில் ஏற்றப்பட்டோம்,

ஏற்றும் போது என்ன சொன்னார்கள் தெரியுமா? போலீஸில் ஒரு சில வழக்கமான விசாரிப்புகள் இருக்கின்றன... உடனே வந்து விடலாம் என்றார்கள்.

அவ்வளவு தான் விடியற்காலை ஒரு இரண்டு மணியளவில் அந்தப்பகுதியில் உள்ள எல்லா இடங்களையும் தேடி முடித்து எங்களோடு சேர்த்து ஒரு பத்து பன்னிரன்டு பேருடன் மோதரை போலீஸில் சிறையில் கொண்டு போய் அடைக்கப்பட்டோம்.

நான் சுற்றி சற்று நோட்டம் விட்டேன், எனது மற்ற சகோதரன் பேசவேயில்லை, ரொம்பவும் சூழ்நிலையால் பாதிக்கபட்டிருந்தார். பக்கத்து அறையில் ஏற்கனவே ஒரு எட்டு பத்து பேர் வரையில் இருக்கிறார்கள். எங்கள் அறைக்கு வெளியே ஒரு பெஞ்சில் ஒரு தாய் தனது இரண்டு மகளுடன் அமர்ந்திருக்கிறார், கொஞ்சம் தள்ளி இன்னும் கொஞ்ச பெண்கள் எங்களை போல் சந்தேகத்தில் அழைத்து வரப்பட்டு அமர்ந்திருக்கிறார்கள்.

நாங்கள் விடப்பட்ட அறையில் ஓரு சிறிய திண்ணை போல சீமெந்தால் கட்டப்பட்ட ஒரு பகுதி, கைதிகள் நித்திரை செய்ய என்பது தெரிந்தது, அதை தாண்டி கதவுகள் இல்லாத ஒரு கழிப்பறை மாத்திரம், ஒரு சிறிய தண்ணீர் குழாய் தரையிலிருந்து ஒரு இரண்டடி உயரத்தில், ஓரு பழைய வெற்று பெயிண்ட் கொள்கலன் ( பெயிண்ட் டின்), துருப்பிடித்து, தனது உண்மை வடிவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு......

சுத்தம் என்பது மருந்துக்கும் கிடையாது, ஒருபுறம் புழுக்கம், இன்னொரு புறம் துர்நாற்றம்....., தாங்க முடியவில்லை.

நான் இருந்த அறையில் ஒரு ஏழு பேர் வரையில் இருந்தோம். அந்த அறையில் ஒரு இளைஞர், ஒரு நாளுக்கு முதலே அவரை அழைத்து வந்திருக்கிறார்கள் சந்தேகத்தின் பேரில், பாவம் அவர் இரண்டு நாட்களாக பச்சை தண்ணீர் கூட குடிக்கவில்லை, அவரது தந்தையாரும் மற்றவர் உறவினர் என்று நினைக்கிறேன் இருவரும் வெளியிலிருந்து ஏதேதோ சமாதானம் சொல்கிறார்கள் ஆனால் அவர் கேட்பதாய் இல்லை. உரக்க கத்துகிறார், " எப்படியாவது என்ன வெளியில எடுங்கோ..." என்று. காரணம் என்ன தெரியுமா? அவரது உறவினர் சொன்னார் அடுத்த நாள் அவர் கனடா பயணமாக போகிறார் அதற்காக தான் கொழும்புக்கு வந்திருக்கிறார், என்று...

அந்த பயணத்தில், அவரது எதிர்காலத்தின் கனவில், மண்விழுந்து விட்ட சோகம், ஆற்றாமை, துடிப்பு தான் அவரை அவ்வாறு செய்ய தூண்டியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

பார்க்க வந்தவாகள் எல்லாரையும் போலீஸார் திருப்பியனுப்பிவிட்டனர். இப்போது போலீஸ் நிலையத்துள் அழைத்து வரப்பட்டவர்கள் மட்டும்.
நான் என்ன செய்தேன் தெரியுமா அந்த இடத்தின் வெறுமையை, சோகத்தை, போக்க நினைத்து எனது சகோதரனுடன் சேர்ந்து கொண்டு நகைச்சுவையாக பேச தொடங்கினேன் அங்கிருந்தவர்களிடம், எனது நோக்கம் அப்படியாவது
எங்களோடு இருந்தவர்கள் மத்தியில் ஒரு இறுக்கம் நீங்கி ஒரு பரஸ்பரம் வந்தால் எல்லாரும் சற்று கவலை மறக்கலாமே என்ற நினைப்பில். நேரம் நகர நகர எல்லாரும் எல்லாருக்கும் பரிச்சயமானது போன்ற உணர்வு வரத்தொடங்கியது....

தொடர்ந்து வரும்.......!

ஆகஸ்ட் 30, 2005

கொழும்பிலே! மீண்டும் கோவிந்தா,

கொழும்பிலே!... மீண்டும் கோவிந்தா,

நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் இருக்கிறது, அதுவும் கொழும்பிலே பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் ராணுவம் மற்றும் போலீஸ் உசார் நிலையில் இருக்கிறது. சோதனை சாவடிகள்.... சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், இத்தியாதி இத்தியாதி......

ஆனால் கொழும்பில் மீண்டும் சுடரொளி பத்திரிகை அழுவலகம் குண்டு வீசிதாக்கப்ட்டு இருக்கிறது. இதில் ஒருவர் பலியாகியிருக்கிறார், மற்றும் மூவர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

பாருங்கள் இவ்வளவு பாதுகாப்பிற்குள்ளும், தைரியமாக மோட்டார் சைக்கிளிலே வந்து தாக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

இதில் என்ன பெரிய விஷேசம் என்றால், இன்று காலை இலங்கையில் இருந்து வெளிவந்திருக்கும் தினசரி பத்திரிகைகளில் அதுவும் தமிழ் மொழி அல்லாத எந்த பத்திரிகைகளிலும், (அதாவது சிங்கள மொழி அல்லது ஆங்கில மொழி பத்திரிகைகள்) இந்த விடயம் பற்றி தலைப்பு செய்தியாகவோ அல்லது முன்பக்க வசய்தியாகவோ வரவில்லை. டெயிலி நியூஸ் பத்திரிகை மட்டும் செய்தியை வெளியிட்டு இருந்தது.

இவ்வளவு தான் ஊடகங்களின் ஒற்றுமையும், ஊடக ஜனநாயகமும்!
இதிலிருந்து என்ன தெரிகிறது.....,

அட போங்கப்பா..!..!...!
தூங்குறவன எழுப்பலாம், தூங்குற மாதிரி நடிக்கிறவன எழுப்ப முடியுமா?.....


தயானந்தா எங்கே.....! ?.

கடந்த வாரம் வெக்டோன் தொலைக்காட்சியின் இலங்கை கலையக பொறுப்பாளர், திரு.தயானந்தாவுக்கு கொலை மிரட்டல் செய்தி பற்றி எனது பதிவில் பதிந்திருந்தேன்.

அதன் பிறகு விடியல் நிகழ்சியில் இன்று வரை தாயானாந்தாவை காணவில்லை, அவரை நிகழ்ச்சியிலிருந்து நீக்கிவிட்டதா வெக்டோன் தொலைக்காட்சி, அல்லது அவர் நமக்கேன் வம்பு என்று விலகிவிட்டாரா?.... அல்லது கொஞ்சம் சூடு தணியட்டும் பிறகு தலைகாட்டுவோம் என்று விடுப்பில் சென்று விட்டாரா?. தெரியவில்லை

என்ன இருந்தாலும் அவர் இல்லாதது விடியல் நிகழ்ச்சியில் ஒரு இடைவெளி தெரிகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

அவரது கிண்டலும், கேலியும், கூடி நமட்டுசிரிப்பு என்று சொல்வார்களே அந்த ஒரு அர்த்தம் பொதிந்த சிரிப்புடனுமான, அவரது அரசியல் அல்லது நடப்பு சம்பவங்கள் நிகழ்ச்சிகள் குறித்த விமர்சனங்களும் கருத்துகளும் மிகவும் ரசிக்க கூடியவை......,

என்ன செய்ய
எதையுமே தொடர்ந்து அனுபவிக்க முடியாது அல்லது கூடாது எனபது தானே
தமிழன் தலையெழுத்தாகி போயிருக்கிறது இலங்கையை பொறுத்தவரை!.

பத்திரிகை சுதந்திரம் கோயிந்தா!.... கோயிந்தா!

ஆகஸ்ட் 25, 2005

அவசரகால சட்டமும் - தமிழர் படும் பாடும்

உலகத்தமிழர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு.
யாரோ ஏதோ செய்தார்கள், அது வெற்றியா தோல்வியா? அல்லது அவர்கள் நினைத்தது நடந்ததா தெரியவில்லை... ஆனால் இலங்கை பேரினவாத அரசியல்வாதிகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது.

இதனால் மீண்டும் தமிழர் நிலை திண்டாட்டமாகி போனது தான் பெரும் சோகம்!

ஆம், கடந்த வார கதிர்காமர் கொலையின் பின்னர் இலங்கை அரசாங்கத்தால் மீண்டும் நாட்டில் அவசரகால சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.... !
இதன் தொடர்ச்சியாய், குறிப்பாக கொழும்பில் வரையறையற்ற கைதுகள் இடம்பெறுவதை காணக்கூடிய தாக இருக்கிறது... தினம் தினம் ஊடகங்களி்ன் தலைப்பு செய்திகளை இவை மாத்திரமே அடைத்து நிற்பதை எல்லாரும் அறிவோம்.

அதுவும் தமிழர் மட்டுமே இப்படி கைது செய்யப்படுகிறார்கள்....
சிறையில் விடப்படுகிறார்கள் என்று மட்டும் தெரியும். ஆனால் அப்படி கைது செய்யப்பட்டவர்கள் யார் பின்னர் அவர்களின் நிலையென்ன திரும்பவும் விடுதலை செய்யப்பட்டார்களா? யாருக்காவது தெரியுமா? அரசாங்கம் யாருக்காவது தெரியப்படுத்துகிறதா?, எந்த ஊடகத்துக்காவது தெரியுமா?

நேற்று சுடரொளி பத்திரிகையின் நிருபர் புகைப்படபிடிப்பாளர் இலங்கை பொலீஸ் அல்லது ராணுவம் அல்லாத ஜேவிபியின் ஆயுதம் தாங்கிய அங்கத்தவர்களால் கடுமையாக தாக்கப்பட்டு போலீஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார், அவரது புகைப்பட கருவிகள் அனைத்தும் நாசம் செய்யப்பட்டிருக்கின்றன.... உடமைகள் களவாடப்பட்டிருக்கின்றன, காரணம் சுடொரொளி பத்திரிகை விடுதலைப்புலிகளின் பத்திரிகை என்ற கண்ணோட்டத்துடன்.

கொழும்பிலே வைத்து இலங்கையின் எதிர்கட்சி தலைவரின் வீட்டுப்பகுதியில் வைத்து ஒரு தமிழர் கைது செய்யப்படடிருக்கிறார். அதுவும் இவர் நாட்டிலிருந்து ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன்னாலேயே புலம் பெயர்ந்து இங்கிலாந்தில் வசிப்பவர், இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர், தற்போது விடுமுறையில் இலங்கைக்கு வந்து அவர் கல்வி பயின்ற ரோயல் கல்லூரியையும் அதன் விளையாட்டு மைதானத்தையும் தனது புகைப்பட கருவியில் பதிவுசெய்த வேளை, எதிர்கட்சி தலைவரின் வீட்டை படம் பிடித்தார் என்று கைது செய்யபட்டிருக்கிறார். ( அதாரம் வெக்டோன் செய்திக்குறிப்பு)

இப்படி வெளிவந்தவை கொஞ்சம் வராதவை ஏராளம் எழுதினால் எழுதலாம் எழுதிக்கொண்டேயிருக்கலாம்.

ஐயோ பாவம் தமிழர்கள்!
அதுவும் குறிப்பாக கொழும்பை நாடிவரும் தமிழர்கள்.

ஏன் வருகிறார்கள்?
கீழே நான் சொல்ல போவது இலங்கையில் இருக்கும் அல்லது அங்கிருந்து புலம் பெயர்ந்த தழிழர்களுக்கு தெரியும், ஆனால் இலங்கையை பற்றி அறியாத தமிழர்களுக்காக சற்று விளக்கமாக சொன்னால் தான் அவர்களுக்கு தமிழரின் பாடு புரியும் என்பதற்காக இதை குறிப்பிடுகிறேன்.

சாதாரணமாக நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளின் பொருட்டு கொழும்பிற்கு தான் வரவேண்டும் என்பது கட்டாயம், இது எல்லாருக்கும் தெரியும்.

குறிப்பாக பார்ப்போமானால் ஏதாவது பெரிய நோய் அல்லது அது குறித்த சிகிச்சைக்காக, பெரிய வைத்தியசாலைகள் தேவையென்றால் அதற்கும் கொழும்புதான்,

வெளிநாட்டு வேலை வாய்ப்பை தேடி வரவேண்டுமென்றால் அதற்கும் கொழும்பு தான்....

அரசாங்க காரியங்கள் ஆகவேண்டுமென்றாலும், குறிப்பாக குடிவரவு குடியகல்வு ஆவணங்கள், பத்திரங்கள் அத்தாட்சிபடுத்தல் எல்லாம் கொழும்பு தான்...

அரசாங்க அமைச்சக அலுவல்கள் அதாவது இடமாற்றம், அல்லது பதவி நியமன கடிதம், சம்பள மாற்றத்தை உறுதிபடுத்த, அல்லது ஏதாவது ஆவணம் பெற, குறிப்பாக கல்வி திணைக்களம், சுகாதார திணைக்களம் சம்பந்தமானவை என்றாலும் கொழும்பு தான்.
இது குறிப்பாக தமிழருக்கு மாத்திரம் அதிகம் எனலாம்.

வாகனம், மற்றும் போக்குவரத்து திணைக்கள சம்பந்தமான அரசு சம்பந்தபட்ட வேலைகளுக்கும் கொழும்பு தான்....

யாராவது அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க, அல்லது மனுக்களை தர அல்லது தேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றாலும் கொழும்புதான்.

மற்றது வெளிநாட்டில் வேலை செய்து வீடு திரும்பும் போதும் அவர்களை வரவேற்று எதிர்கொள்ளவும், அல்லது திரும்ப வழியனுப்பிவைக்கவும் கொழும்புதான்.

வெளிநாட்டு பொருட்களை கொண்டு சென்றால் அதை சுங்க திணைக்களத்திலிருந்து விடுவிக்கவும் கொழும்புதான் ( இது நாட்டின் ஏனைய ஒரு சில இடங்களில் இருந்தாலும் தழிழர்களுக்கு கொழும்புதான்)

இதில் இன்னோர் முக்கிய விடயம் வடக்கு கிழக்கிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பும் அல்லது அனுப்பிய பணத்தை பெற்றுக்கொள்ளவும், அல்லது அவர்களோடு தொலைபேசி தொடர்புகொள்வதற்கும் கொழும்பிற்கு தான் வரவேண்டும் என்ற கட்டாய நிலையிருந்தது, யுத்த காலங்களில் வடக்கு கிழக்கிற்கு அரசாங்கம் தடையுத்தரவு பிறப்பித்து இருந்த வேளையில்... இப்போது எப்டியோ தெரியாது.

அடுத்தது முக்கியமாக பெரும்பாலான தழிழ் இளைஞர்கள், யுவதிகள் தொழில் நிமித்தம் வருவதும் கொழும்பு தான். கொழும்பிலே தங்கம், மற்றும் ஆடை ஆபரண தொழில் மற்றும் வியாபாரம் அல்லது மற்ற வியாபாரத்தில் அநேகம் பேர் தமிழர்கள் தான் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை இங்கு சொல்லியாகவேண்டும்.

மற்றது கலை துறை சார்ந்த வேலைகள், அதாவது தொலைகாட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வேண்டுமென்றாலும், ஏதாவது பிரத்தியேக ஒலி அல்லது ஒளிபதிவுகளுக்கும் கொழும்பு தான்.

இப்படி எதற்கெடுத்தாலும் கொழும்பு! கொழும்பு! கொழும்புதான்!,

ஆக இப்படி இருக்கும் நிலையில் கொழும்பு என்பது மக்கள் வாழ்வில் தவிர்க்க முடியாதது, தினம் தினம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தலைநகர் தேடி வரும்போது அவர்கள் படும் இன்னல்கள் சொல்லில் அடங்காதது.

தலைநகரில் இரவு தங்குவது என்பது நிச்சயமற்ற ஒன்று, உறவினர், நண்பர் வீடோ? அல்லது விடுதிகளோ?, ஹோட்டல்களோ? எல்லாமே பயம் தான் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.

ஆகவே தூர இடங்களிலிருந்து வருபவர்கள் அநேகர் இரவோடு இரவாக தான் தலைநகரை நோக்கி புறப்படுவார்கள் காரணம் காலையில் தலைநகருக்குள் வந்து தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் மாலையில் தலைநகரைவிட்டு கிளம்பிவிடுவார்கள்.

மாலை ஆறு மணிக்கு பின்னர் கொழும்பில் கோட்டை புகையிரத நிலையத்தை சென்று பார்த்தவர்க்கு தெரியும். வவுனியா, மட்டகளப்பு, மற்றும் பதுளை நோக்கி (முற்றிலுமான தமிழ் பிரதேசங்கள்) போகும் இரவு கடுகதி புகையிரதத்திற்கு எவ்வளவு சனங்கள் இருப்பாகள் என்பதை.
ஏன் தெரியுமா? இரவு தங்கி சிலநேரம் தாமும் சந்தேகத்தில் கைது செய்யப்படலாம் என்ற பயமும் அதனால் வரும் சிக்கல்களக்கு ஆளாக முடியாத பயமும் தான்.

மீண்டும் மறுநாள் காலை 5.30 அல்லது 6 மணியளவில், இதே கோட்டை ரயில் நிலையத்துக்கு சென்றால் தெரியும், மேற்சொன்ன இடங்களிலிருந்து புறப்பட்டு காலையில் கொழும்பை அடையும் இரவு கடுகதி புகையிரதத்தில் எவ்வளவு சனம் வரும் என்று.....

தங்களின் தேவைகளை சுமந்து கொண்டு, தூக்கம் தொலைத்து, களைத்து போய், தைரியத்தை கைவிடாது, ஒரு நிமிஷமும் வீணாகி போய்விடக்கூடாது என்ற பதைபதைப்பில் எல்லாரும் பிரதான வெளிவாயிலை நோக்கி ஓடுவதை..... பார்க்க பரிதாபமாக இருக்கும்.

ஐயா!, அந்த இடத்தில் இருந்தால் தெரியும் அதன் வேதனையும் வலியும்.
இதை நானும் அனுபவித்தவன் என்ற அளவில் எனக்கு அந்த வலி வேதனை, களைப்பு, பயம், எல்லாம் தெரியும்.

ராணுவத்தினரோ, அல்லது போலீசோ நீங்கள் புகையிரத நிலையத்திலிருந்து அல்லது வெளியில் வரும் போதோ பாதையில் போய்க்கொண்டிருக்கும் போது உங்களை மறித்து நிறுத்தி உங்களை சோதனையிடும் போது உயிர் போய் வரும், காரணம் நீங்கள் தமிழனாய் இருப்பது தான், ராணுவ அதிகாரியோ போலீஸோ உங்களை அந்த இடத்திலே கைது செய்யலாம், யாரும் கேட்க முடியாது, ஏனென்றால் அவசரகாலசட்டம்,

கொழும்பு வருபவர்களில் அநேகம் பேர் ஓரே நாளில் தங்களது வேலைகள் பூர்த்தியடையாமல் மறுநாளும் இருக்க வேண்டிய ஒரு சூழல் வந்து, எங்காவது தங்கியிருக்கும் போது சோதனை என்று வந்தால் போச்சு, போலீசில் பதிவு செய்யவில்லையா, உடனே கைது.

அந்த ஒரு நாளுக்காக எங்கு போய் என்னத்தை பதிவது,

ஏனென்றால் பதிவு செய்வது என்பது இன்னும் சிக்லான விடயம். ஏனென்றால் கொழும்பில் போலீசில் பதிவு செய்வதாய் இருந்தால், ஒரு நபர் தான் நிரந்தரமாக வதியும் முகவரி அப்பகுதி கிராம சேவகரால் உறுதிசெய்யப்பட்டு அது அப்பகுதிக்குறிய போலீஸ் நிலையத்தில் அத்தாட்ச்சிபடுத்தபட்டிருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் தான் கொழும்பில் பதிவு செய்யலாம். அதிலும் நிறைய சிக்கல் உண்டு அதையெல்லாம் சொல்லி முடியாது.

ஆக வந்த வேலை பாதியில் நிற்க நாம் தீடிரென தேடுதல் நடவடிக்கை என்ற பேரில் சந்தேகம் என்று அழைத்து செல்லப்பட்டு விட்டால், ஒன்னு கிடக்க ஒன்னாகிவிடும் அதாவது வந்த வேலையை முடிக்கவும் முடியாது, தொடரவும் முடியாது, அதிலிருந்து வெளிவர ஆகக்குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும், ஆனால் தமிழர் விடயத்தில் இரண்டு நாட்கள் எல்லாம் வெறும் பொய்.

அப்போது அந்த தமிழரின் உணர்வு எப்படியிருக்கும் என்று யோசித்து பாருங்கள். அவரின் காலம், நேரம் வீண், பட்ட சிரமம் வீண், பணம் வீண், எல்லாமே பாழ்பட்டுபோயிருக்கும். பிறகு வெளியில் வந்து திரும்ப முதலில் இருந்து தனது காரியத்தை ஆரம்பிக்கவேண்டும். இதில் பாதிக்கபடுகிற மொத்த அப்பாவித்தமிழர்களின் உணர்வை இழப்பை யாராவது கணக்கிட்டு இருக்கிறார்களா?, இல்லை.

இதில் கைது செய்யப்படும் பெண்கள் பாடு பெரும் பாடு,
பாருங்கள் இலங்கையில் தமிழனாய் பிறந்ததின் பலனை!

குற்றவாளிகள் தண்டிக்க படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது, அதற்காக அப்பாவி தமிழர்கள் எவ்வளவு பேர் பாதிக்க படுகிறார்கள் என்று யாருக்காவது அக்கரையிருக்கா?

அண்மையில் லண்டன் குண்டு வெடிப்பு இடம் பெற்றது, தேடுதல் நடத்தப்பட்டது கைதுகள் இடம்பெற்றன.... இதற்காக ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயம் கைது செய்யப்பட்டதா?...,

ஆனால் இலங்கையில் நடப்பது என்ன? சந்தேகம் என்றால் அது ஒட்டுமொத்த ஒரு சமூகத்தின் மீது மட்டும் தான் விழுகிறது.
இது ஏன்? இந்த விடயத்தில் மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் நிறுவனங்களும் ஸ்தாபனங்களுகம் ஏன் இதை பார்க்க மறுக்கின்றன. சாதாரண ஒரு பிரஜையை சும்மா கைது செய்து கொண்டு போய் சிறைப்படுத்தி பின்னர் விடுதலையாகிறார் என்று வைத்துக்கொள்வோம் அவரது உள உணர்வுகள் எப்படியிருக்கும்?

யாராவது யோசிக்கிறார்களா?... தமிழன் தானே அவனுக்கென்ன உளமாவது, உணர்வாவது என்ற எண்ணம் தானே.

பிறகு எப்படி சமாதானம், சம உரிமை சகோதரத்துவம் எல்லாம் வரும் எல்லாம் வார்தைகளாக மட்டுமே தான் இருக்கும்.

தமிழ் மணத்தில் இருக்க கூடிய அறிஞர்கள், தமிழர் சமூக நலவிரும்பிகள், தமிழுக்காக குரல் கொடுப்பவாகள், எழுச்சிமிக்க சிந்தனைவாதிகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்து, சர்வதேச சமூகத்தை மனித உரிமைகள் ஸ்தாபனங்களை, இந்த பிரச்சினையை சற்று உற்று நோக்க வைக்க முடியாதா?

இலங்கை பேரினவாத அரசுக்கு சற்று அழுத்தம் கொடுக்க வைக்க முடியாதா?.....

நான் இந்த பதிவை ஏன் இடுகிறேன் என்றால், எனது சொந்த அனுபவம் தான் காரணம். மீண்டும் இலங்கையில் அவசரகால சட்டம் என்றதும் எனக்குள் மறந்து போயிருந்த அந்த கசப்பான நினைவுகள் மீண்டும் விழித்து கொண்டதன் விளைவு தான்.

மற்ற நாடுகளில் அவசரகால சட்டம் எப்படியென்று எனக்கு தெரியாது, ஆனால் இலங்கையில் அந்த சட்டம் ஹிட்லர் ஆட்சிக்கு ஒப்பானது என்றால் மிகையில்லை.

முடிந்தால் எனது அடுத்த பதிவில் அச்சட்டத்தால் 90களின் கடைசிப்பகுதியில் தலைநகரில் நான் பெற்ற இன்பத்தை?????????

உங்களோடு பகிர்ந்துகொள்ள பார்க்கிறேன்.

ஆனால் அதற்கு முன் ஏதாவது செய்ய முடிந்தால் நலமென்று
இந்த கிறுக்கனுக்கு தோன்றியது!

ஆகஸ்ட் 23, 2005

ஊடகங்களின் சுதந்திரமும் அதன் எதிர்காலமும்.

இன்னொரு ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டலா?

இன்று காலை வெக்டோன் தழிழ் தொலைக்காட்சியியில் விடியல் நிகழ்ச்சியில் பத்திரிகைச்செய்திகளை பார்கமுன், இரண்டு இணைய செய்திகளை வாசித்தார்கள்.

"நிதர்சனம்" என்ற தளத்திலும், "நெருப்பு" என்ற தளத்திலும் வெளியாகியிருந்த இரு செய்திகளே அவை.

அதில் "நெருப்பு" இணைய தளம் திரு.தயானந்தாவுக்கு கொலைமிரட்டல் என்று தமக்கு செய்தி கிடைத்திருப்பதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது என்றும்,

"நிதர்சனம்" என்ற தளம் வெக்டோன் தொலைக்காட்சி தனது செய்தியில் இலங்கையின் திரு.ஆனந்தசங்கரியினை அழைத்து (பாராளுமன்ற அங்கத்தவர் என்று நினைக்கிறேன் நமக்கு ஏதுங்க? அரசியலும் அறிவும்,) சுடரொளி பத்திரிகையின் கொழும்பு அலுவலகத்தில் குண்டு வீசப்பட்டது தொடர்பாக அவரை சம்பந்தப்படுத்தியிருப்பதை பற்றி அவரது கருத்தை கேட்ட போது, அவர் இது குறித்தும் தமிழர் தாயகம் குறித்தும் சொன்ன ஒரு கருத்தாடலை ஒளிபரப்பியது மிகத்தவறானது என்ற பார்வையில் மிகவும் காரசாரமாக விமர்சித்து இருந்ததாகவும், வெக்டோனின் இந்த செய்தியால் உலகம் முழுக்க வாழும் தமிழர் மத்தியில் அந்த தொலைக்காட்சி பற்றி ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும், குறிப்பிட்டு இருக்கிறது என்றும் வாசிக்க பட்டது.

இதன் செய்திகளை வாசிக்க தளங்களின் பெயர்களை கிளிக்கினால் செய்திகளை வாசிக்கலாம். ஆனால் இப்படி உரல் தொடுப்பு கொடுப்பது சரியா தவறா தெரியவில்லை, ஏனென்றால் இப்போதெல்லாம் நாளுக்கு நாள் பதிது புதிதாக இணைய தளம், கணணி, சம்பந்தபட்ட சர்வதேச சட்டங்கள் நிறைய வருகின்றன... (அதெல்லாம் இந்த கிறுக்கனுக்கு தெரியாதுங்க!. ஆகவே தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள் நான் நீக்கிவிடுகிறேன்,)

" நிதர்சனம் " ,

" நெருப்பு ".

நானும் பார்த்தேன் "கேணயன்கள்" போன்ற நாகரீகமான!!!! பதங்கள் எல்லாம் பயன் படுத்த பட்டிருக்கின்றன....

அதற்கு திரு.தயானந்தா பேசும் போது திரு.ஆனந்தசங்கரி கொழும்பு கலையகத்திலிருந்து கொண்டு இந்த கருத்தை சொல்லவில்லை அது எங்களுக்கு தெரியாது என்றும், இது லண்டனிலிருந்து நேரடியாக அவரோடு பேசப்பட்டது என்றும், ஆனாலும் யாராவது ஒருவரை அழைத்து பேச வேண்டி வந்தால் எங்களுக்கு தெரியும் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று... என்று விளக்கம் அளித்தார்,,,,,


சரி நான் எழுத வந்தது என்னவென்றால்:

இன்றைய உலகில் யாருக்கும் தனது சொந்த கருத்தை சொல்ல உரிமையில்லையா?... மேலும் ஊடகங்கள் இதை வெளியிடுவது தவறா?

ஒரு நாட்டில், அல்லது ஒரு சமூகத்துள், ஒரு விடயத்தில், அல்லது ஒரு கொள்கையில், அங்குள்ள அது சம்பந்தபட்ட ஒவ்வெருவரிடத்திலும் ஒவ்வொரு நிலைப்பாடு, அல்லது பார்வை இருக்கும். இது தவிர்க்க முடியாதது, இது அவரவர் அது பற்றி கொண்டிருக்க கூடிய அல்லது அறிந்திருக்க கூடிய விபரங்கள், தகவல்கள் மற்றும், அது பற்றிய அறிவு, போன்றவையால் வருபவை. இது சிலநேரம் தனிமனித சுய லாபமாகக்கூட இருக்கலாம், சரி இதற்காக நீ உன் கருத்தை சொல்லகூடாது என்பது சரியா?. இது மனித குல சுதந்திரம் ஆகுமா?. குரல்வளையை நசுக்குவது போல தானே!

இந்த விடயத்தில் ஊடகங்களின் பங்களிப்புகள் பக்கம் சார்ந்தனவாக இருக்கலாமா? எல்லாரின் கருத்துகளையும் ஒளிபரப்புவதில் அல்லது சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்...,

ஒருவர் சொன்ன கருத்து பிழையென்றாலோ?, அல்லது அது சொல்லபட்ட விதம் பிழையென்றாலோ?, எதிரானது என்றாலோ? அதை திருத்தி அல்லது அதை மறுத்து இன்னொறுவர் தனது நிலைபாட்டை வெளிப்படுத்தலாம், இதை விட்டு அவர் கருத்தை ஒளிபரப்பிய ஊடகத்தை குறை கூறுவது சரியில்லை என்றே எனக்கு படுகிறது.

திரு.தயானந்தாவுக்கு உண்மையிலேயே கொலை மிரட்டல் வந்ததா இல்லையா தெரியவில்லை, அதை அவரும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

அப்படியே உண்மையாக இருந்து, உண்மையிலேயே இவ்வாறாக எல்லாரையும் கொலைசெய்து கொண்டே போனால் பிறகு உலகில் எப்படி கருத்து சுதந்திரம் இருக்கும்?.... இப்படி பார்த்தால் துப்பாக்கிகள் கொண்ட உலகம் மட்டுமே மிஞ்சும் போல் தான் இருக்கிறது.

என் கருத்துக்கும் கொள்கைக்கும் யாராவது முரண்பட்டால் கொலைதான் என்றால், அறிவு, நாகரீகம், அறிவியல், கலாச்சாரம், எல்லாம் என்னாவது அது வெறும் வார்தை மட்டுட்ம்தானா?

அதேநேரம் முக்கியமாக நமது தமிழ் இனம் மட்டுமே இப்படி அடித்துக்கொண்டு அழிந்து போகுமோ என்ற பயமும் கூடவே வருவதையும் உணர முடிகிறது. அப்படியானால் நமக்கு சுதந்திரம் என்ற ஒன்று இல்லாமலேயே போய்விடுமே!. நமக்குள்ளேயே அடித்துக்கொண்டு நமது சமூகம் சுருங்கி போகுமானால் இது உண்மையில் எதிரிக்கு தானே சாதகமாகும், ஏன் நாம் இதை உணர மறுக்கிறோம்? பிறகு எங்கே நாம் பலம் வாய்ந்த சமூகமாக வரமுடியும். சுதந்திர காற்றை சுவாசிக்கமுடியும். தொடர்ந்தும் நம்மை நாமே காட்டிக்கொடுத்தது போல தானே ஆகும்.

காலணித்துவ நாடுகள் தான் தாங்கள் கால் பதித்த நாடுகளி்ல் இந்த பிளவை வேண்டுமென்றே ஏற்படுத்தியிருக்கின்றன...., இன்னும் அதையே செய்கின்றன. ஆனால் அவைகளிடமிருந்து சுதந்திரம் பெற்றுவிட்ட பிறகும் நாம் இதையே தொடர்ந்தும் கைக்கொண்டு நமக்குள்ளேயே பிளவுபடலாமா?

கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், இதற்காக நமக்குள்ளேயே நாமே வேரறுத்தக்கொண்டால் யாருக்கு லாபம். நமது பிரச்சினை நீடிக்க நீடிக்க, நமது தமிழ் இனம் இன்னும் தொடர்ந்து நாடோடியாகவே புலம் பெயர்ந்து தானே வாழ்ந்து வரும். இது நம் வருங்கால தமிழினம் முற்றாக அழிந்து போக வாய்ப்பாக அமைந்து விடாதா?, எப்போது நாம் நமக்குள்ளேயே ஒற்றுமையொன்றை எதிர்பார்ப்பது.

பிறகு நமக்கு சுதந்திரம் வந்து என்னத்தை செய்ய? அப்போது அந்த காற்றை சுவாசிக்க ஒரு தமிழன் கூட இருக்கமாட்டானே. நாம் என்ன தொடர்ந்து இப்படியே ஆயிரம் ஆண்டுகள் இருந்து விடுவோமா? தமிழனுக்கு பிறந்த தமிழ் மறந்து போன ஒரு புது கலப்பு சமுகம் அல்லவா தோன்றும் அது நமது தமிழை தமிழ் கலாச்சாரத்தை எந்த மொழி பேசி காப்பாற்றும்? சற்று யோசிக்க வேண்டாமா?

மேற்கு நாடுகளில் 18 வயதை தாண்டிய குழந்தைகளை பெற்றோர்கள் கட்டாயப்படுத்த முடியாது..., அப்படியே இந்த தலைமுறையை நம் தமிழ் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி தம் கட்டுக்குள் வைத்தாலும் அடுத்த தலைமுறையை எப்படி தமிழுக்குள் கொண்டு வரமுடியும்?

கொஞ்சமாவது எதிர்கால தமிழின் அல்லது தமிழனின் ஒற்றுமை பற்றி யாராவது யோசித்தால் என்ன? என்று எனக்கு படுகிறது.

இவ்வாறு இவர்கள் தங்களுக்குள் உணர்ச்சிவசப்பட இன்னொரு காரணமும் இருக்கிறது போல எனக்கு தொன்றுகிறது,

இப்போது வெக்டோன் தொலைக்காட்சி, இலவச ஒளிபரப்பாக இருக்கிற காரணத்தால் அநேகம் பேர் பார்க்க கூடியதாக இருக்கிறது, ( அதுவும் செப்டம்பர் முதலாம் திகதி வரையில் தான்) மற்ற தமிழ் தொலைக்காட்சிகள் எல்லாம் கட்டண தொலைக்காட்சிகள்.

ஆக அந்த அந்த தொலைகாட்சிகள் தான் அளிக்கும் கவர்ச்சியான நிகழ்ச்சிகளை பொறுத்தே அதன் ரசிகர் கூட்டம் கவரப்படும், வியாபாரம் ஆகும், கூட்டம் இருக்கும். அப்போது அந்த தொலைகாட்சியின் கொள்கைகளும் ஆதரிப்புகளும் தான் அதன் ரசிகர்களுக்கு நியாயபடுத்தி காட்டப்பட வாய்ப்பிருக்கிறது. அப்போது மக்கள் மத்தியில் பரந்த நோக்கம் கொண்ட கருத்துகள் வளரவோ இருக்கவோ வாய்புகள் மிகக்குறைவு.

இதுவும் மக்களை பிரித்தாளும் ஒரு தந்திரம் தான், மேலும் இதுவும் மக்கள் தங்களுக்குள் பிளவு பட வாய்பளிக்கும் என்பதை பார்க்க மறுக்கிறோம்.

நன்றாக உற்று நோக்கினால் ஏறக்குறைய எல்லா தமிழ் தொலைக்காட்சிகளுமே இதை தான் செய்கின்றன, தமிழக தொலைகாட்சிகள் முதற்கொண்டு,

இதே வேலையை இலங்கையின் பெரும்பான்மை சமூக தொலைகாட்சிகளும் செய்கின்றன. ஆனால் அவர்கள் ஒரு விடயத்தில் ஒற்றுமை காக்கிறார்கள் தமிழர் குறித்த பிரச்சினையில் எல்லாருமே ஒரு பக்கம் இதனால் தான் பெரும்பான்மை சமூகம் இன்னமும் தமிழன் பிரச்சினையளவில் ஒரே முகத்துடன் இருக்கிறது.


மற்றும் ஏதாவது ஒரு ஊடகம் வாயிலாக ஏதாவது ஒரு கருத்து மக்களை போய் சேருகிற போது...., அது ஏற்படுத்தும் தாக்கத்தை கண்டு மற்ற தமிழ் ஊடகங்கள் சற்றே யோசிக்கின்றன என்றே படுகிறது. அதற்காகதானோ என்னவோ இவ்வாறான நடவடிக்கைகள்.

இதற்காக கொலை தான் முடிவு என்றானால்?...... உலகம் எங்கு போகும்.? தமிழன் என்ன ஆவான்....,

என் புத்திக்கு தெரிந்ததை சொல்லியிருக்கிறேன்.!

சிந்தை தெளிந்து
வஞ்சம் தவிர்த்து - தமிழன்
ஒன்றுபடும் காலம் வருமா?....

ஆகஸ்ட் 20, 2005

என் புத்திக்குள் வந்த வினா?

என் புத்திக்குள் வந்த வினா?
இலங்கை அரசியலில் கடந்த வாரம் திரும்பவும் வேதாளம் முறுங்கை மரத்தில் ஏறிய கதையாகி போனதை எல்லாரும் அவதானித்தோம்....
சரி நடந்தது நடந்து விட்டது, இதெல்லாம் இலங்கை அரசியலில் சகஜமப்பா !!!! என்று சொல்லலாம், என்றாலும்....., எதற்கு நடந்தது, இதனால் உச்ச பயன் யாருக்கு? என்று எனக்குள் ஒரு எண்ணம் வந்து போனதன் விளைவாக இந்த பதிவு.

இது யாரையும் உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ அல்லது மேதாவி தனம் காட்டவோ அல்ல.

விடுதலைப்புலிகள் செய்திருப்பார்களா?...
செய்திருக்கமாட்டார்கள் என்று தான் எண்ண தோன்றுகிறது. ஏனெனில் தற்போது தங்களது போராட்டத்தில் அரசியலையும் இணைத்துக்கொண்ட பின்னர் அவர்களின் சமீபகால செயற்பாடுகளும், எடுத்து வைக்கும் அடிகளும் மிக நிதானமானவை....! அவசரப்படமாட்டார்கள். அப்படி அவர்களுக்கு திரு. கதிர்காமரை கொலை செய்ய வேண்டுமென்றால் இவ்வளவு காலம் அவர்கள் காலம் தாழ்த்தியிருக்க மாட்டார்கள், அவர்களின் இப்போதைய போராட்ட நிலையில் கதிர்காமர் அவசியமேயில்லை என்றே நினைக்க தோன்றுகிறது. அவர் அவர்களுக்கு ஒரு டுபுக்கு அல்லது ஜுஜுபி!

இதை ஏன் ஜேவிபியினர் செய்திருக்க கூடாது என்ற கோணத்தில் பர்ர்த்தால் என்ன?,காரணம்:
1. இந்த ஜேவிபியினர் இலங்கையில் மக்களை உச்சபட்ச மூளைச்சலவை செய்து அரசியல் செய்பவர்கள். அவர்களது பேச்சு வன்மை அந்த அளவிற்கு தன்மை வாய்ந்தது.

உதாரணமாக ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் இப்படி வருகிறது. " Kill him, not let him go".
அவனை கொல் போக விட வேண்டாம். இது தான் அர்த்தம்.
இந்த வசனத்தில் கமா அடையாளத்தை ஒரு சொல் மாற்றி பின்னால் போட்டு பாருங்கள் வாக்கியத்தின் முழு அர்த்தமே மாறிவிடும் எப்படி? "Kill him not, let him go" அதாவது அவனை கொல்ல வேண்டாம் போக விடு.

இப்படி தான் அவர்கள் வார்த்தைகளை மாற்றி பேசுவதில் அசகாய சூரர்கள், இதனால் தான் முன்பு பலிகளுடனான பேச்சு வார்தை ஒப்பந்தங்களின் வார்த்தைகளை இப்படி போடு அப்படி போடு என்று பெரும் குழப்பம் நடந்து ஜானாதிபதி பெரும் விசனப்பட்டு கருத்துகள் சொல்லியிருந்ததும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.....

சரி விடயத்திற்கு வருவோம்,
இந்த ஜேவிபியினர் ஆளும் கட்சியில் இருந்து விலகி ஒரு தீடீர் தேர்தலை கொண்டு வந்து குறைந்தபட்சமாக, உண்மை தெரியாத இல்லது தெரியாது போல நடிக்கும் பேரினவாத பெரும்பான்மை ஓட்டுக்களை சுருட்டி பாராளுமன்றத்தில் வார்த்தை ஜாலத்தால் பதவியை பிடிக்கலாம் என்ற அவர்களின் திட்டம் அல்லது கனவு பலிக்கமலே போனதும், மாறாக சுதந்திர கட்சி பெரும்பான்மை பலம் இல்லாவிடினும் அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு நடத்திவருவதும் இவர்களுக்கு முதல் தோல்வி.

மேலும் திரு.கதிர்காமர் தான் அம்மையாருக்கு எல்லாவிடயங்களிலும் ஆலோசனை மந்திரியாக இருப்பவர் என்பதும் இவர்களுக்கு பெரிய தலைவலி மட்டுமல்ல ஒரு அரசியல் எதிரியும் கூட.

ஆக இவர்களுக்கு ஒரு காயை அடிக்கவேண்டும் ஆனால் இரண்டு பெரிய காய்கள் விழவேண்டும். அதற்காக திரு.கதிர் பயன் படுத்தப்பட்டிருக்கலாம். காரணம் விழப்போகும் கொலையினால் அரசாங்கமும், மக்களும், சர்வதேச நாடுகளும் உடனே புலிகளை தான் சந்தேகிக்கும் இது முதல், மற்றது தங்களை யாரும் பின் தொடரமாட்டார்கள் இது இரண்டு.

மேலும் இதனால் சமாதான முன்னெடுப்புகள் உடனே தடைபெறும். இப்படி நடந்து எல்லாரும் புலிகளை விமர்சித்து... ஏதாவது ஏடாகூடமாக போய் மீண்டும் ஒரு யுத்தத்தை கொண்டு வந்து விட்டால் போதும் இது கும்பிடபோன தெய்வம் குறுக்க வந்த மாதிரி.

மற்றது கொலையில் தங்களை யாரும் கண்டுகொள்வே மாட்டார்கள். ஏனென்றால் திரு. கதிர்காமர் விடுதலை புலிகளுக்கும் அவர்களின் செயற்பாடுகளுக்கும், முன்னெடுப்புகளுக்கும் முதல் எதிரி என்பது சர்வதேச சமூகம் உட்பட உலகம் அறிந்த ஒரு விடயம். ஆகவே இந்த பழி வெகு சுலபமாக புலிகளை சேர்ந்து விடும் இதற்காக பெரிதாக பிரயத்தனபடத்தேலையில்லை.

இது மெய்ப்பட்டுப்போனது எப்படியெனில் எனது இந்த அனுபவம் ஒரு சிறு உதாரணம்.

எனது சிங்கள மொழி நண்பர்கள் (கொஞ்சம் படித்தவர்கள் இங்கு நல்ல பதிவியில் இருக்கக்கூடியவர்கள்) என்னிடம் இது பற்றி பேசும் போது உடனே சொன்னது ஐயோ பாவம் கதிர்காமர் படித்த மனிதர், அறிவாளி, நம் நாட்டுக்கு இப்போதைய அரசியலுக்கு தேவையான மனிதர், இதை புலிகள் தான் செய்திருக்கிறார்கள் என்று உறுதியாக சொன்னார்கள்.
எப்படி என்று கேட்டேன் அதற்கு அவர்கள் சொன்ன விடயம் உலகிலேயே புலிகள் மட்டும் தானாம் பயங்கரவாத குழுக்களிலேயே தொலைதூரம் குறி பார்த்து தவறாது சுடுவதில் கெட்டிக்காரர்களாம். அதுவும் ஸ்னைப்பர் துப்பாக்கி சுடுவதில் அவர்கள் தான் வல்லவர்களாம். இவர்களை விட்டால் இலங்கையில் இந்த வேலையை செய்ய யாரும் இல்லியாம்.

அவர்களே இப்படியென்றால் இலங்கையில் இருக்க கூடிய மேற்சொன்ன உண்மை தெரியாத மற்றும் தெரியாது போல நடிக்கும் பேரினவாத பெரும்பான்மை மற்றும் சிந்திக்காத மக்கள் நிலை எப்படி இருக்கும் என்று இங்கு சொல்ல தேவையில்லை. ஆக இந்த அளவில் இதை செய்தவர்களுக்கு வெற்றி.

2. இனி ஒரு சரியான ஆலோசகர் இல்லாது சந்திரிகா அம்மையார் தான் அரசாங்கத்திற்குள் அல்லது கட்சிக்குள் எடுக்க போகும் முடிவுகளில் தடுமாறுவார், ஆக இது உட்கட்சி பூசலுக்கும் குழப்பத்துக்கும் இலகுவாக வழிசமைக்கலாம், இப்படி ஆகும் பட்சத்தில் அந்த கட்சியிலிருந்து ஒரு சில பாராளுமன்ற உறுப்பினாகளை மற்றும் கட்சி அங்கத்தவர்களை இழகுவாக தம் பக்கம் கொண்டு வந்து தம்மை பலப்படுத்திக்கொள்ளலாம். ஆக அடுத்த தேர்தலில் நாற்காலி நிச்சயம், அப்படியே ஆட்சி போனாலும் எதிர்கட்சியாக நிச்சயம் வரலாம் என்ற கணக்கும் காரணமாக இருக்கலாம், இறந்த கால மற்றும் நிகழ்கால இலங்கை அரசியல் சம்பவங்களையும் நிகழ்வுகளையும் வைத்து பார்க்கும் போது எண்ண தோன்றுகிறது.

சரி எப்படி செய்திருக்கலாம் அல்லது எப்படி சாத்தியம்?
அரசு படைகளுக்குள் இருக்கும் தங்கள் ஆதரவாளர்களை கொண்டு நடத்தியிருக்கலாம்.
காரணம் கொலையாளி அங்கு எப்படி வந்தான் என்பது ஓருபுறம் இருக்க, அவ்வளவு பாதுகாப்பு இருக்கும் போது எப்படி தப்பியிருக்க முடியும் என்பது தான் பிரதான கேள்வி?. கொலை நடந்தது இருப்பது வீட்டிற்கு வெளியே.

ஆக பாதுகாப்பு படையினர் முன்னால் தான் கொலைசெய்யப்பட்டவர் சரிந்திருப்பார், உடனே படையினர் உஷாராகி அந்த ஏரியாவையே சுற்றி வளைத்து மூடியிருப்பார்கள்.
அப்படியானால் யாராவது அகப்பட்டிருக்க வேண்டும்.... அதுவும் இல்லை.

சரி புலிகள் செய்தால் அவர்கள் தப்பிக்க முயற்சிப்பார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்வார்கள். அது தான் புலிகள் செய்த தாக்குதல் வரலாறுகள் வெளிப்படுத்தியிருப்பவை. அப்படியானால் ஒரு சடலமாவது கிடைத்திருக்க வேண்டும் கிடைக்கவில்லை. ஆக இந்த இடத்திலிருந்தும் புலிகள் தான் செய்திருப்பார்கள் என்கிற எண்ணத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்பது தெரிகிறது.

ஆக படையினரின் ஒத்துழைப்புடன் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டிருக்கலாம். தேடுதல் நடவடிக்கைகள், கைதுகள் என்பன கூட முன்கூட்டியே திட்டமிடப்பட்டு எங்கு எங்கு நடத்தப்படவேண்டும் எப்படி எப்படி கைதுகள் இருக்க வேண்டும் என்று ஆலோசித்து நடத்தப்பட்டிருக்கலாம். அப்படி இல்லையென்றால் அரசாங்கமே இதனை செய்திருக்கலாமோ என்னமோ? யார் கண்டார்கள்....!

அதையும் ஒரு சந்தேக கண்ணோட்டத்துடன் மிகவும் துள்ளியமாக எப்படி பார்க்கபட்டு்ள்ளது என்பதை இங்கே சொடுக்கினால் தெரியும்.

ஆகஸ்ட் 17, 2005

எனக்குள் ஓரு வருத்தம்

ஏன் இந்த நிலை?

இப்போதெல்லாம் இணைய வளர்ச்சியின் உச்ச காலகட்டத்தில் தமிழ் வலைபதிவுகள் வந்துவிட்ட இந்த நேரங்களில் அதுவும் தமிழ்மணம் வந்தபின்..., ஏராளமான எழுத்தாளர்கள், எழுதும் ஆர்வலர்கள் எல்லாரும் இங்கே கடைவிரித்து சகலதையும் தருகிறார்கள் அல்லது தரவிளைகிறார்கள்.
இதில் சமூக அக்கரை, நாட்டுப்பற்று, காலாச்சார சீர்கேடுகள், காலமாற்றத்திற்கான காலாச்சார ஒவ்வாமைகள், அரசியல், பொருளாதார விழிப்புணர்வு, பெண் விடுதலை, அறிவியல், ஆன்மீகம், பற்றியெல்லாம் புதுப்புது வடிவங்களில் பதிய எண்ணக்கருத்துகளுடன், புதிய சிந்தனைகள் வீரியத்துடன் எழும்பி வந்து வாசிப்போரை சற்றே நிலைகுழைய வைக்கின்றன...., (நிலைகுழைய என்ற வார்த்தை எனது எண்ணத்தை அப்படியே சொல்கிறதா தெரியவில்லை). வாசகர், எழுதுவோர் மத்தியில் பெரும் சண்டைகளையும், சர்ச்சைகளையும், கருத்து வேறுபாடுகளையும் தோற்றுவிக்கின்றன.

வலைபதிவர்கள் தங்களுக்குள் நாகரீகமற்ற (தார்மீகமற்ற) தாக்குதல்களையும், வசைகளையும் பரிமாறிக்கொள்வதில்... இதில் என்னத்துக்கு ஒரு மரியாதை பச்சையாக சொன்னால் தங்களுக்குள் அடித்துக்கொள்வதும், மற்றும் தான் சொல்வது மட்டுமே சரியென்ற பிடிவாதமும் தான் மலிந்து கிடக்கின்றன...

இது அநேக நேரங்களில் வருத்தம் தருவாதாக இருந்தாலும் ஒன்றை மட்டும் தெளிவாக படம் பிடித்து காட்டுவது தெரிகிறது. அதாவது நமது சமுதாயத்திற்குள் அதுவும் தமிழ் சமூகத்துக்குள் அநேக மாறுதல்கள் மாற்றங்கள் வரவேண்டும் என்பதையும் அநேக கோளாறுகளும் குளறுபடிகளையும் கொண்டுள்ளன என்பதையும். அதனால் தான் யாராவது ஏதாவது உண்மையான ஒரு புதிய மாறுதலுக்கான நோக்கோடு ஒரு பதிய கருத்தை, புதிய சிந்தனைகளை எழுதவோ,அல்லது பகிர்ந்து கொள்ள முற்பட்டாலோ அது பலமான எதிர்ப்புகளுக்கும் தூற்றுதலுக்கும் ஆளாகிறது... இது இயற்கை தான், உண்மையும் கூடதான்.

ஏனெனில் உலகில் எந்த மாறுதலும் அல்லது எந்த ஒரு விளிப்புணர்வும் ஒரே இரவிற்குள் நடந்தேறியதாக சரித்திரமே இல்லை எனலாம். கால ஓட்டத்தில் எல்லாம் சரிபடுத்தப்படும் என நம்பிக்கை கொள்வோம்.

சரி அதெல்லாம் இருக்கட்டும் நான் எழுத வந்தது என்னவென்றால்.... கடந்த ஆகஸ்ட் 6ம் திகதி முதல் 14ம் திகதி வரை பின்லாந்து நாட்டில் ஹெல்சிங்கி நகரில் உலக சாம்பியன் பட்டத்திற்கான தடகள விளையாட்டுபோட்டிகள் இடம்பெற்று முடிந்தன.... உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் வீர வீராங்கனைகள் கலந்துகொண்டு தன் திறைமைகளுக்கு முகவரி தேடிகொண்டார்கள். இதில் ஒரு சில பழைய உலகசாதனைகள் முறியடிக்கபட்டு புதியவை நிலைநாட்டப்பட்டன... குறிப்பாக பெண்களுக்கான ஈட்டி எறிதல், பெண்களுக்கான தடியூண்டி பாய்தல் (Pole volt) போன்றவற்றில் புதிய உலக சாதனைகள் நிலைநாட்டப்பட்டன..., ஆண்களுக்கான 4x100 மீற்றர் அஞ்சல் ஓட்டப்போட்டியின் தகுதிகாண் சுற்றில், தொடர்ந்தும் முதல் நிலையில் இருந்த அமெரிக்கா கோட்டை விட்டதும், குறிப்பிடும் சம்பவங்கள்.

முழு அளவிலான அனைத்து போட்டிகளும் கடந்த 14ம் திகதி முடிந்து நாடுகள் பெற்ற நிலைகள் என்று பார்த்தால் அமெரிக்கா முதலாம் இடம், ரஷ்யா இரண்டாம் இடம், எத்தியோப்பியா மூன்றாம் இடம்..... இப்படி பட்டியல் நீள்கிறது.

ஆனால் உலகத்தில் வல்லரசாக கனவு காண்பதிலும், உலகில் அதிகூடிய சனத்தொகை என்ற பட்த்திற்கும், கணணி மற்றும் அறிவியல் வளர்ச்சியில் சர்வதேச புகழையும் அங்கீகாரத்தையும் பெற்ற அல்லது பெற முனையும் இந்தியாவை ஒரு இடத்தில் கூட காண முடியவில்லை என்பது பெரும் வேதைனைக்குறிய விடயம் மட்டுமல்லாது நூறு கோடி பேரை கொண்ட நாடு ஆகக்குறைந்து 5 இடத்திற்குள்ளாவது இடம்பெற முடியாத நிலையில் உள்ளது என்பது வெட்கம் என்று கூட சொல்லலாம்.

வறுமையின் கோட்டிற்குள்ளே உள்ளதாக கணிக்கபட்டிருக்கும் எத்தியோப்பியா மூன்றாம் இடத்திற்கு வந்திருக்கிறது, மிகவும் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் இந்தியாவிற்கு ??????....

இதற்கு யார் பொறுப்பு?.... இதை பற்றி யாராவது எழுதினால் என்ன?.... ஏன் வரமுடியவில்லை?.., யார் காரணம்? கிரிகெட் கிரிகெட் என்று அது மட்டுமே ஒரு விளையாட்டு என்று பித்து பிடித்து கோடி கோடியாக கொட்டியும் எல்லாத்தையும் கோட்டை விட்டு வரும் இந்திய அணிக்கு விரயமாக்கும் பணத்தில் மற்ற விளையாட்டு போட்டி வீரர்களை உருவாக்க முடியாதா?.... ஏன்? ஏன்?.... இந்த அவல நிலை இந்தியாவிற்கு.....

ஓரு பி.டி உஷாவிற்கு பிறகு யாராவது உலகம் பேசப்பட்ட அளவில் வந்தார்களா தெரியவில்லை. கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஓரிரு இந்தியர்களை தகுதிகாண் சுற்றுகளில் காணமுடிந்தது, ஆனால் இந்த போட்டிகளில் யாருமே என் கண்ணிற்கு படவேயில்லை. சில நேரம் மேற்கு நாடுகளின் தொலைகாட்சிகள் நமது வீரர்களை இருட்டடிப்பு செய்து விட்டதா? யாம் அறியோம்.

இந்தியா இதைப்பற்றி சற்று சிரத்தையுடன் சிந்தித்தால் நல்லது என்று எனக்கு படுகிறது. சும்மா கிரிக்கட் வீரர்களை மட்டும் கோடீஸ்வரரர்களாக்கிவிட்டு, வெற்றி கோப்பைகளை கோட்டைவிட்டுகொண்டிருக்கிறோம். நான் கிரிகெட்டுக்கு எதிரி கிடையாது. ஆனால் விளைச்சல் தராத பயிருக்கு ஏன் சும்மா பணத்தை முதலீடு செய்யவேண்டும். மாற்று பயிரை உற்பத்தி செய்யலாமே என்ற எண்ணம் தான்.

இதைபற்றி நமது தமிழ்மண மேதைகள், அறிவுஜீவிகள், மாற்றம் வேண்டி சீற்றம் கொள்ளும் சிந்தையாளர்கள், சற்று எண்ணி எழுதினால் ஏதாவது ஒரு மாற்றம் எங்காவது பூக்கமலா போகும்.

வரும் காலங்களில் இந்தியர்களையும் இந்திய கொடிகளையும் நாம் இந்த விளையாட்டரங்கங்களில் பார்க்கலாமா?...
கனவு காணலாமா?.... கனவு பலிக்குமா?

நன்றி!