அக்டோபர் 31, 2005

வாழ்த்துகள் இரண்டு!


வையகம் எங்கும் பரந்து
வாழும் எல்லா
தமிழ் நெஞ்சங்களுக்கும்
வலைபதிவர்களுக்கும்!
வாசகர்களுக்கும்!

வரும் காலங்கள்
அனைவருக்கும்
தொல்லைகள் தொலைத்து
சுபீட்சமான நாட்களாக மாறி
எல்லோருக்கும்
எல்லாம் பெற்று தர
வேண்டி....

என்
இனிய தீபாவளி வாழ்த்துகளுடன் கூடி இன்ப ஈகை திருநாள் வாழ்த்துகளும்!......

என்றும் அன்புடன்
ஜோசப் இருதயராஜ்

அக்டோபர் 24, 2005

எனக்கு மனசு கேட்கவில்லை

கடந்த ஒரு வாரமாக தமிழ் மணம் பக்கமே வரமுடியவில்லை... கொஞ்சம் பிஸியாகி போனதால் தான் இந்த நிலை. ஆனால் இன்று வந்து பர்த்தால் நம்ம வீட்டில் ஒரே களேபரம்....

ஏறக்குறைய எல்லா அறைகளிலும் ( வலைபக்கத்திலும்) ஒரே விசனங்களும், வருத்தங்களும், கேள்விகளும், கோபங்களும்,விமர்சனங்களும், கண்டனங்களுமாக, மனிதனுக்குறிய எல்லா உணர்வுகளும் சிதறி கிடந்ததை காணக்கூடியதாக இருந்தது...... அவ்வளவையும் வாசிப்பதற்குள் எனக்கு தலை சுற்றிவிட்டது... பாதி விளங்கியது பாதி இன்னும் விளங்கவே இல்லை... அப்பப்பா,!

இது நாள் வரை தமிழ் மணம் மூலம் எனது கிறுக்கல்களும் திரட்டப்பட்டுள்ளன என்கின்ற வகையில், எனக்குள் எழுந்த சிந்தனையின் வெளிப்பாடு தான் இனி...

தமிழ் மணத்தின் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ள முறைமை அல்லது எடுத்துள்ள முடிவுகள் சரியா தவறா என்பதில் ஏகப்பட்ட கருத்துகள்.

ஆனால் கருத்துகள் சில இடங்களில் முன்வைக்கப்பட்ட அல்லது பரிமாறப்பட்ட முறை சற்றும் அழகல்ல என்பது "நாகரீகம்" அறிந்த எல்லாருக்கும் தெரியும். இதற்காக அப்படி எழுதியவர்கள் நாகரீகம் தெரியாதவர்கள் என்று அர்த்தமில்லை அவர்கள் கொஞ்சம் விரைவாக உணர்ச்சி வசப்பட்டுவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதை எழுதியவாகள் யாரும் படிக்காதவர்கள் இல்லை, கற்றவர்கள், அறிந்தவர்கள், தான் என்ன செய்கிறோம் என்று உணர்ந்தவர்கள். இந்த அளவிற்கு கொதித்தது நியாமாக இருந்தாலும், (அவர்கள் பார்வையில்) ... உதிர்த்த வார்தைகள் தான் தான் கொஞ்சம் எல்லாரையும் நெருடுகிறது. கொஞ்சம் யோசித்து வார்தைகளை பயன்படுதியிருக்லாமோ என்று எண்ண தோன்றுகிறது. அள்ளி வீசியாச்சு இனி எப்படி அதை சரிப்பண்ணுவது?.

ஐயன்மீர்!
தொடர்ந்து கொஞ்சம் பொறுமை காத்து வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்....


இங்கு தமிழ் மணத்தில் இருப்பவர்கள் அல்லது எழுதி வருபவர்கள் போல் நான் அறிவாளியோ, கணனியில் புலியோ, கிடையாது ( சாதாரண கைநாட்டுதான்) ஆனால் தமிழின்பால் எனக்கு கொஞ்சம் பற்று உண்டு, தமிழன் எல்லா இடத்திலும் மதிக்கபடனும் என்ற எண்ணம் உண்டு அம்புடுதான். ( கல்லூரியில் இறுதி தோர்வில் கூட தமிழில் மட்டும் தான் நான் பாஸ்).

இங்கு ஜித்தாவில் உள்ள தமிழக நண்பர்கள் ஒன்று கூடி இணையத்தில் தமிழ் வளாப்போம் என்ற ஒரு கருத்தரங்குக்கு எப்படியோ என்னை அழைக்கப்போய், அழைப்பை பெற்று அங்கு போகும்வரை, தமிழ் மணம் பற்றியே எனக்கு தெரியாது. (ஆனால் அது வரை தமிழில் TISCI முறையில் தட்டச்சு செய்து எனது வீட்டுக்கும், நண்பர்களுக்கும் கடிதம் எழுதுவது மட்டுமே எனது தொழில்... ஊரில் நண்பர்கள் எல்லாரும் அடடே கம்யூட்டரில் கடிதம் எழுதுகிறானே (1996 களில்) என்று வியப்பார்கள் என்பது வேறு கதை)

கருத்தரங்குக்கு போயாச்சு!...

தொழில் என்று வந்த பின்னர் "தமிழ்" வீட்டிலும் நண்பர்களிடமும் மட்டுமே புழக்கத்தில் இருந்தாலும், இவ்வளவு காலமும் தமிழில் எழுதனும் என்று இருந்த ஆர்வம் மங்கிபோயிருந்த வேளையில் தான் இந்த கருத்தரங்கு எனக்குள் ஒரு புது தெம்பை தந்தது என்றால் தப்பில்லை. அதன்பிறகு தான் எனது கிறுக்கல்களை வலையில் பதிக்க தொடங்கினேன். (சரி சரி சுய புராணம் எதற்கு? என்ன சொல்ல வருகிறாய்? -ஐயா கொஞ்சம் பொருங்கள்)

நான் எழுத வந்த போது திரு.காசி அவர்களே கூட எனக்கு எழுத சொல்லி ஊக்கம் தந்தார்கள்.

இப்போது நான் சொல்ல வருவது என்னவென்றால் இப்போது தமிழ் மணத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகளும் சரி, முடிவின் விளைவுகளும் சரி நம் எல்லோரையும் சற்று அவசரப்பட வைத்து விட்டதோ என எண்ண தோன்றுகிறது.....

திரு காசியும் மற்றும் நிர்வாகமும் எடுத்த முடிவை சற்று மறு பரிசீலனை செய்தால் நல்லது என்று என் கிறுக்கு புத்தி சொல்கிறது. காரணம் இன்று தழிழ் வலையுலகத்தில் "தமிழ் மணம்" ஒரு சிறந்த இடத்தில் இருக்கிறது என்றால் அது மிகையில்லை. அதற்காக திரு காசி அவர்களும் அவரது நிர்வாக குழுவினரும் ஆற்றிய பங்கு எந்த விதத்திலும் குறையிட்டு சொல்ல முடியாது.

அதற்காக காசியின் பங்கு மட்டுமே காரணம் என்று சொல்லவும் கூடாது...., இதற்கு தங்கள் பங்களிப்பை செய்த (ஆக்கங்கள் வாயிலாக) எல்லா வலை பதிவாளருக்கும் இதில் ஒரு சிறு துளியாவது சேரவேண்டும் என்பதை யாரும் மறுக்க மாட்டடார்கள் என்று நினைக்கிறேன்.

அமெரிக்காவில் இருப்பவர்கள் தனது நேரத்தை எப்படியும் காசாக்கதான் பார்ப்பார்கள் என்று எனது சகோதரன் ஒருவர் சொல்ல கேட்டிருக்கிறேன்...

அப்படியிருக்க தனது நேரத்தை தமிழுக்காக தமிழில் எழுதும் ஆர்வலர்களுக்காக ஒரு சேவை மனப்பான்மையுடன் தனது பொருளாதாரத்திலும் ஒரு பங்கை செலவிட்டு பங்காற்றியது உண்மையில் போற்றப்பட வேண்டிய விடயம் தான். வார்தையாக இல்லாது தமிழ் சமூகத்துக்கு உண்மையில் உழைத்தது பெரும் செயல்தான். நிச்சயம் அவர்கள் செயல் போற்றுதலுக்குறியது தான்....ஆனால்!

இப்படியாக எல்லாரும் சேர்ந்த ஆற்றிய ஒரு செயலால் தமிழ் கொஞ்சம் தன்னை ஒருபடி அழகு படுத்தியிருக்கிறது. உலகில் இன்று ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக வலையில் அதிகம் பாவிக்கபடும் மொழி தமிழ் என்று கூட சொல்ல கேட்டிருக்கிறேன்... இன்று எதையும் வலையில் தமிழ் வடிவில் காண்கிறோம், போதாதற்கு தமிழ் மணம் உண்மையில் அநேக வாசகர்களை பதிவர்களை தன்னகத்தே கொண்ட பிரமாதமான ஒரு சேவை தான். ஒரு சிறந்த திரட்டி தான் என்பதில் யாருக்கும் இரண்டாம் கருத்து இருக்க இல்லை.

இது உண்மையில் தழிழுக்கு கிடைத்த வெற்றி தான். ஆனால் இந்த வெற்றி இப்படி பாலாக்கப்படுகிறதே!... யாரும் உணரவில்லையா?

தமிழனுக்கும் தமிழுக்கும் மட்டும் எந்த நல்ல விடயமும் தொடர்ந்து கிடைப்பதில்லை எல்லாத்துக்கும் அற்ப ஆயுசு தான். இது தான் நமக்கு கிடைத்த சாபம் போலும்.

நல்லது கெட்டது நாலையும் பேசி, கண்டு கேட்டு, உணர்ந்து சரியானதை தேர்ந்தெடுத்து வளரும் சமுதாயம் எவ்வளவு நல்லது. அது எந்த நிலையிலும் தன்னை அழியாது காத்துக்கொள்ளும், எந்த இடர்பாடுகளுக்கும் முகம் கொடுக்கும் நிலையில் தன்னை வைத்திருக்கும், உலகுக்கு தன் நிலை குறித்து உணர்த்தவும் தன் தனித்தன்மை குறித்து பெருமைபடவும் செய்யும்.... இந்த இலக்கை நோக்கி ஒரு சமூகத்தை பயணிக்க செய்ய முனையும் ஒரு கால கட்டத்தில்..... "நீக்கப்படும்" அல்லது "தணிக்கை" என்ற பொருள்படும் சட்டங்கள் கொண்டுவரலாமா?..

எனக்கு என்று நான் வைத்திருக்கும் சேவையில் யாரும் வந்து எனது விருப்புகளுக்கு இசையாத பட்சத்தில் நான் தணிக்கை செய்வேன் அல்லது நீக்குவேன் என்பது வெளியில் இருந்து பார்ப்பவர் கண்களுக்கு சர்வாதிகாரமாக தெரிந்தாலும்..., அது அவர் அவர் இஷ்டம் என்று தான் சொல்லலாம், இருந்தாலும் ஆனால் நமக்கு பிடித்தால் போவோம் இல்லை என்றால் விடுவோம் என்று மறுப்பதும் வருபவர்களின் உரிமை என்பதை மனதில் கொள்ளுதலும் அவசியமாகிறது.

இன்றைய நவீன எழுத்துலகில் ஒருவரின் சட்டங்களுக்கு
கட்டுபடவேண்டும், அல்லது கட்டுபட்டு தான் எழுத வேண்டும் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஒவ்வாமையை தோற்றுவிக்கிறது.

ஆனால் தமிழ் மணம் அப்படியல்ல ஒரு சேவை மனப்பான்மையோடு தொடங்கப்பட்டது ( அப்படிதான் நான் நேற்று வாசித்த ஏறக்குறைய எல்லா ஆக்கங்களிலும் இருந்து தெரிந்து கொண்டது), ஆக அங்கு யாவருக்கும் கருத்து சொல்ல உரிமை இருப்பது தான் நல்லது. அவரவர் கருத்து கண்ணோட்டம் அவரவர் சார்ந்தது.., இதில் மற்றவர் அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் சுதந்திரம்.

பொதுவாக ஒருவரது சிந்தனை, அறிவு, பெற்ற அனுபவம், கல்வி என்பவற்றை பொறுத்துதான் அவரது சமுகத்தின் மீதான பார்வை அல்லது உலக அளவிலான கண்ணோட்டம் இருக்கும். அது சிலருக்கு சரியாகவும் சிலருக்கு தவறாகவும் படலாம்... இதன்படி அவரவர் தன் மனவோட்டங்களை, எழுதலாம் அல்லது மேலும் சிலரின் மனவோட்டங்கள் நமக்கு புதிதாக இதுவரை நமது சமூகத்தில் இல்லாத ஒரு கருத்தாக ஒவ்வாமையாக இருக்கலாம்.

அதற்காக எதிர்மறையான கருத்துகள் அல்லது சிந்தனைகள் வரவே கூடாது என்று எதிர்பார்ப்பதும், தடுக்க நினைப்பதும் இயலாத காரியம் என்றே எனக்கு படுகிறது.

ஒரு சமூகத்தில் எல்லாரும் ஒத்த கருத்துகளையே கொண்டிருந்தால், அது அடிமைச்சமூகம் என்று தான் பொருள்கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் யாருக்காவது கட்டுபடல் என்ற மனநிலையில் தான் அது சாத்தியப்படும்.

ஆனால் நிச்சயம் எதிர்மறையான கருத்துகளும், சிந்தனைகளும், தொடர்ந்து வெளிவரவேண்டும் அப்போது தான் எல்லாருக்கும் ஏன்? எப்படி? என்ன? என்ற கேள்விகள் வரும், ஆக இப்படியாக கேள்விகள் மற்றும் பதில்கள் என்று தேடல் இருக்கும் போது தான், ஒரு சமூகம் அடிமைதனத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் பாம்பு சட்டை உரிப்பது போல் உரித்து வெளியில் வரும்.

ஆக இப்படியான கட்டுப்பாடுகள் சுய சிந்தனைகளை (அவை நம் நம் அளவுகோலின் படி நல்லதோ கெட்டதோ) கெடுக்கும் என்ற அடிப்படையில் தணிக்கை அல்லது நீக்கம் என்ற செயல்திட்டங்களை அமுல் படுத்துவதை சற்று மீள் பரிசீலனை செய்யலாம் அல்லது இடைநிறுத்தலாம்.

மேலும் அதிகரித்து வரும் பதிவுகளின் எண்ணிக்கையாலும், மூன்று மாதங்களுக்கு மேல் புதுப்பிக்கபடாத பதிவுகளை நீக்குவது என்பதையும் சற்று மீள் பரிசீலனை செய்தால் நல்லது என்று எனக்குப்படுகிறது.

காரணம் எல்லா வலைபதிவர்களும் தொடர்ந்து எழுதிகொண்டிருப்பவர்கள் அல்லர், தங்களது வாழ்வியல் வேலைகளுக்கூடே அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் தாங்கள் கண்ட கேட்ட உணர்ந்த விடயங்களை பதிப்பவர்கள் தான் அதிகம் இப்படி உள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் பதிப்பது என்பது ஒரு சிலருக்கு முடியாத காரியம் அதுவும் தொழில் நிமித்தம் புலம் பெயர்ந்து இருப்பவர்கள் என்றால் கொஞ்சம் கஷ்டம், அதுவும் மத்திய கிழக்கில் பணிபுரிபவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்..., ஏனென்றால் இங்கெல்லாம் மற்ற நாடுகளை போல் விடுமுறை நாட்கள் என்பது கிடையவே கிடையாது. வாரத்தில் ஒரு நாள் தான், அதுவும் சிலருக்கு கிடையாது,

மற்றும் விடுமுறை என்று ஊருக்கு போய் திரும்பி வரும் சமயங்களில் அப்படியே தமிழ் மணத்துடனான சொந்தம் கொஞ்சம் விடுப்பு எடுத்துக்கொள்ளும். ஆக இப்படியான சந்தர்ப்பங்கள் அநேகம் ஆகவே பதிவர்கள் எப்போது வந்து பதிந்தாலும் அப்போது அது தானாகவே Activate ஆக ( தமிழ் தெரிலீங்க) ஆவண செய்தால் நன்று.

சரி அறிவிப்பை செய்தார்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்கள், உடனே பலர் அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க ஒரு சிலர் அதை சரி என்று வாதிட்டார்கள்... ஆனாலும் எதிர்ப்பை தெரிவித்தவர்கள், சற்று காரமாகவே எழுதி விட்டார்கள். ( எழுதி வருகிறார்கள்) சரி என்று வாதிட்டவர்களை, சற்று இளக்காரமாகவே பின்னூட்டமிட்டார்கள்... இந்த இடத்தில் தமிழர்கள் நாம் எல்லோரும் நம்மை மறந்து செயற்பட்டு விட்டோமோ என்று நினைக்கிறேன்.

தமிழ் மணத்தில் உள்ள பதிவர்கள் எல்லாரும் மதிப்பிற்குறியவாகள் தான் (அவர்கள் வயதில் சிறியவரானாலும் பெரியவரானாலும் ). ஆனால் யாராவது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நம் ஒருவருக்கொருவர் செயல்படுகிறோமா?...வேற்று மொழிகாரனுக்கொன்றால் விட்டு கொடுத்துவிடுவோம் தமிழருக்குள் விட்டுக்கொடுத்தால் அது மான பிரச்சினையாகிறது.

உனக்கு எந்த விதத்தில் நான் குறைந்தவன் என்ற ஒரு இருமாப்பில் எழுதுவது போல் எல்லாரும் ரொம்பவே அவசரம் காட்டிவிட்டோம். இது வேண்டாம். என்னை பொறுத்தவரை அவசரமுடிவுகள் இருபக்கமும் உள்ளதாகவே நினைக்கிறேன். இதை பெரிது படுத்தவேண்டாம்,

நான் என்ன சொன்னேன்?, அதற்கு நீ என்ன சொன்னாய் என்றெல்லாம் தாக்குதலகள் தொடர்கிறது. தவறுகள் எங்கு இல்லை? எவரிடத்தில் இல்லை? எல்லாருமே ஏதோ வகையில் தவறுகிறவர்கள் தான் அது தான் மனித இயல்பு என்று தவறுக்கு பிறகு தன்னை திருத்திகொள்வது தானே படித்தவர்க்கு அழகு,

எல்லா மதிப்பிற்குறிய எழுத்தாளர்களும், வலைபதிவர்களும், அறிஞர்களும், நாம எதையாவது பதிக்கும் போது ஏதாவது ஒரு நோக்கத்துடன் தான் எழுதுகிறோம். தற்கால உலகத்தில் தமிழன் நிலையும் தமிழும் எப்படி இருக்கு என்று உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். நம் இனத்தின் பெரும் பகுதி இன்னமும் கால்வயித்து கஞ்சிக்கு வழியின்றி தான் இருக்கு, அநேகம் பேர் அடிப்படை கல்வி அறிவு இல்லாது கண்ட கண்ட பினாத்தல் பேர்வழிகள் பின்னால் போய் அவர்களை அண்ணாந்து பாத்து கையேந்தி தான் நிற்கிறார்கள். இன்னமும் அடிமைகளும் அடிமைதனமும் அப்படியே தான் கையாளப்படுகிறது.

இன்னமும் படித்தவர்கள் நாமே கூட நம் மக்களுக்கு துரோகம் செய்கிறோம்... நாம நாம சும்மா நமக்குள்ள சண்டை போட்டு பிரிந்து போவதில் யாருக்கு லாபம் என்று யோசித்து பாருங்கள்.. நமக்குள் நீ பெரியவனா? நான் பெரியவனா? அல்லது நான் இன்ன சாதி அல்லது நீ இன்ன மதம், நீ ஒழுங்கா? நான் ஒழுங்கா? என்று இப்படியே நாமே பேசிப்பேசி நம் மக்களை பிரித்து எதிரிக்கு வழிசமைத்து கொடுக்கிறோம்...

தமிழன் எங்கெல்லாம் செரிந்து வாழுகிறானோ? அல்லது எங்கெல்லாம் கூடி வாழ முற்படுகிறானோ? அங்கெல்லாம் இந்த சமூகம் பிளவு பட்டுதான் வாழுகிறது, அதனால் தான் இன்னமும் கல்தோன்றி முன்தோன்றா காலத்தே தோன்றிய தமிழும் தமிழ் இனமும், இன்னமும் அடுத்தவருக்கு சேவகம் செய்கிறது என்பது வேதனையான விடயம்.

ஐயா பெரியவுங்க நீங்க எல்லாம் சேர்ந்து நட்ட ஒரு ஆலமரம் வளர்ந்து விழுது விட தொடங்கும் போது அப்படியே வெட்டி சாய்கிறது சரிதானா? எல்லாரும் தனித்தனியே போய் தனிமரமா தான் நிற்பேன் என்று போனால், அது தோப்பாகுங்களா? இன்றைய காலகட்டத்தில் நிறைய தோப்புகள் உருவாகலாம், ஆனால் ஒரு தோப்பை அழித்து விட்டு தான் இன்னொன்னு உருவாக்கனுமா? நம்ம சமுகத்துக்கு இது தான் நீங்கல்லாம் கத்துகுடுக்கிற பாடமுங்களா? இப்ப புதிதாக வருகிற பதிவர்களுக்கும் இந்த நோய் தானே தொற்றும்.... அப்ப எப்படீங்க...?........

அதனால இந்த கிறுக்கன் முளைக்கு பட்டத சொல்றேன்... எல்லாரும் எல்லாதையும் மறப்போம், மன்னிப்போம், ஒரு முறை செய்தது தவறு அல்லது அவசரப்பட்டுவிட்டோம் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்வோம், இதில் சுய கெளரவம் வேணாம்.., ஏதோ தப்பு நடந்து போச்சு போனது போகட்டும். இனி இப்படி நடக்காம பார்த்துக்குவோம்... எல்லாரும் எல்லாத்திலயும் சுதந்திரத்த அனுபவிப்போம், ஆனா நாம அனுபவிக்க முனைகிற சுதந்திரம், நாம செய்யப்போற காரியம் நம்ம இனம் தழைக்கவும் தலைநிமிரவும் பயன்படட்டும்.....,

ஆழக்கடலில் போய் மீன் பிடிப்பவர்கள் வலையில் எல்லா விதமான மீன்களும் தான் சிக்குது, அதுக்காக அவங்க எல்லாதையுமா? கரைக்கு கொண்டு வாராங்க..., அல்லது நமக்கு தேவையில்லாததும் கிடைக்குதுன்னு சொல்லி மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு போகாமலா இருக்காங்க...

"தமிழ் மணமும்" அந்த மாதிரி பரந்த நோக்கோடு இருக்கட்டும். யாரும் வந்து எழுதட்டும், நாம நாம நமது தேவைக்கு ஏற்ப மாதிரி Selective ஆக இருப்போமே. தமிழ் மணம் திரட்டிக்கு வரும் வாசகர்கள் தெரிந்து எடுத்து வாசிக்கட்டும், நமக்கு தேவையில்லாதது புறக்கணிக்கபடும் போது அதை தருபவாகள் தங்களை மாற்றிக்கொள்ள ஏதுவாகும்.

நாம எல்லாரும் தமிழர்கள் என்ற ஒரே குடையின் கீழே வந்து.. மீண்டும் வீறு நடை போடுவோம்.

வீட்டை விட்டு போனவுங்க எல்லாரும் மீண்டும் வரட்டும் பழைய மாதிரி தமிழ் மணம் களை கட்டடுங்க.

நடக்குங்களா?... என்னமோ போங்க என் மனசுல பட்டத சுருக்குன்னு சொல்லிப்புட்டேன்.... இத பாத்துட்டு யாரும் நானும் ரொம்ப வெவரங்கெட்டதனமா? அவசரப்பட்டுட்டேன்னு எழுதிராதீங்க! நமக்கு தான் புத்தி பத்தாதுங்களே!

நன்றி.

அக்டோபர் 09, 2005

தமிழரும்!.... தமிழ் வளர்ப்பும்!

கடந்த வாரம் மீண்டும் ஜித்தா தமிழ் சங்கம் ஏற்பாடு செய்த ஒரு கலை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகியிருந்தது, இது இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஓரு பகுதியாக இந்திய தூதரகமும், உயர் ஸ்தானிகராலயமும் இணைந்து நடத்தி வந்த ஒரு மாதகால தொடர்விழா நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக, தமிழர்களுக்கான விழாநாள் தான் கடந்த செப்டம்பர் 28 ம் திகதி.

நிகழ்ச்சி ஜித்தா சர்வதேச இந்திய பாடசாலை ஆண்கள் பிரிவின் விழா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, தொடர்ந்து இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இதே மண்டபத்தில் கடந்த செப்டம்பர் 8ம் திகதி முதல் நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடதக்கது. ஆனால் தமிழர்களுக்கான விழா நாள் தான் கடந்த செப்டம்பர் 28 ம் திகதி.

இனி மேடையின் மையப்பகுதியில் இந்திய கொண்டாட்டம் 2005 ( Indian Festival 2005) என்ற பெரிய விளம்பர போஸ்டர். கீழே மேடையின் கீழ் பகுதியில் ஜித்தா தமிழ் சங்கத்தின் ஒரு போஸ்டர் அதில் ஒரு அழகான வரி "தமிழால் ஒன்றிணைந்தோம் தமிழ் வளர்ப்போம்" என்று, ஆகா! அதை வாசிக்கவே ஒரு சந்தோஷம். (வாசகத்துக்கு சொந்தக்காரர் உண்மையில் பாராட்டபடவேண்டியவர்).

நிகழ்ச்சிக்கு அநேகம் பேர் விருந்தினர்களாக வந்திருந்தனர், அவர்கள் பெயர் விபரம் வேண்டாம், நிகழ்ச்சிக்கு இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது துணைவியார் வருகை தந்திருந்தனர், மற்றும் இலங்கை தூதுவர் கூட வந்து கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக தமிழகத்திலிருந்து திரையுலக நடிகர் நாசர் அவர்கள் வந்திருந்தார், ஆனால் மிகவும் தாமதமாக வந்தார் பயணத்தில் ஏற்பட்ட தடங்கல் என்று சொன்னார்.

நிகழ்ச்சி மாலை 5.30 என்று இருந்தது... நிகழ்ச்சியும் 5.30 க்கு தொடங்கியது.
சிறுவர்கள், பெரியவர்கள் என எல்லாரும் பங்கு பற்றிய பல நிகழ்ச்சிகள் நாடகம், நடனம், பாடல் என்று இருந்தது.

நிகழ்ச்சிகளில் முதலில் ஞாபகசக்தி அல்லது விரைவாக கணக்கிடுதல் என்ற ரீதியில், தமிழகத்திலிருந்து ஒருவர் வந்திருந்தார்..., (பெயர் ஞாபகத்தில் இல்லை, ) பல இந்திய மற்றும் ஒரு சில ஆசிய மற்றும் உலக சாதனைகளை செய்தவர் என்று அறிமுகப்படுத்தப்ட்டார். கணணியுடன் போட்டி போட்டார், சபையில் உள்ளவர்கள் தங்கள் பிறந்த அல்லது திருமணமாண, அல்லது தங்களுக்கு விசேசமான திகதியை சொன்னால் அவர் உடனே அந்த நாளின் பெயரை கூறிவிடுவார்... கணணியில் விடை வருவதற்கு முன்னர். சரியாகதான் சொல்கிறார் என்று சபையினரின் கைதட்டல்கள் சான்று சொன்னது.

மற்றும்படி இதில் பங்கு கொண்ட சிறார்கள், நன்றாக தத்தமது பங்களிப்புகளை செய்தார்கள். ஆனால் பெரியவர்கள் அளித்த எந்த நிகழ்ச்சியும் நல்ல தரமானதாகவோ, அல்லது ஏதாவது கருப்பொருள் உள்ளதாகவோ இருக்கவில்லை என்பது சோகமான விடயம்.

ஒரேயொரு நடன நிகழ்ச்சி, பதினொரு மாதத்தங்களுக்கு முன் வந்து போன சுனாமி பற்றியதாகவும் அதன் கொடூரம் பற்றியதாகவும், அழிவு பற்றிய தாகவும், அதனால் மக்களின் வாழ்கை தலைகீழாக புரட்டிபோடப்பட்டதையும் சொன்னது, நிகழ்ச்சி நன்றாக நெறிப்படுத்தப்ட்டிருந்தது, ஒளியமைப்பு, காட்சியமைப்பு போன்றவைகள் நன்றாக திட்டமிடப்பட்டு கோர்க்க பட்டிருந்தன. ஆனால் அந்த நிகழ்ச்சி இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்தது தான் யாரும் எதிர்பாராத சோகம்.

மொத்ததில் நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்திமயம், தமிழ் என்று பார்த்தால் சிறுமிகள் குழு ஒன்று நடனமாடிய " எங்களுக்கும் வாழ்வு வரும்... வாழ்வு வந்தால்..." என்ற பாடலுக்கான பொங்கள் நடனம் மட்டுமே தமிழாய் தமிழுக்காய் இருந்தது என்று சொல்லலாம்.

அல்லாது ஓரிருவர் நிகழ்ச்சிகளின் இடையில் ஓரிரு தமிழ் (சினிமா) பாடல்களை பாடினர், இன்றைய காலகட்டத்தில் மிகப்பிரபலமான "கரோகே" (Karoake) என்ற பாடலுக்கான பின்னனி இசையை சிடியில் ஒலிக்க விட்டு இசைக்கு பாடும் முறையில் பாடினர்.

இந்த ஓரிரு பாடல்களிலும் கூட சங்கீத மேகம்...., சங்கராபரணம் போன்ற பாடல்கள் மட்டும் கேட்டக கூடியதாய் இருந்தது என்பது வேறு விடயம். ஒரு யுவதி " ஒவ்வொரு பூக்களுமே... என்று மிகுந்த போராட்டத்துடன் பாடி சென்றார், அதிலும் அவருடன் சேர்ந்து ஒரு சிலர் "பியூஷன்" Fusion என்ற பெயரில் ஏதேதோ செய்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு தபேலா வாசித்த நபர் தான் கதாநாயகன். மிகவும் துல்லியமாக அருமையாக வாசித்து சென்றார். அந்த ஒரு திருப்தி மட்டுதான்.

எல்லா நிகழ்ச்சிகளிலும் சினிமாப்பாடல்கள் தான் தலை தூக்கி நின்றன என்பதை சற்று வருத்ததுடன் சொல்லவேண்டியதாகிறது. அதிலும் எல்லாம் இந்தி மயம்தான். மேல் சொன்ன சுனாமி பற்றிய நிகழ்ச்சியில் வந்த மின்சார கனவு படப்பாடல்கள் எல்லாம் கூட இந்தி பதிப்பின் பாடல்கள் தான். கலைக்கு இனம் மொழி மதம் தேவையற்றது... என்பது சரி தான், ஆனால் தமிழ் நிகழ்ச்சிகளில் தமிழை பயன்படுத்த ஏன் இந்த தயக்கம்?

நிகழ்ச்சியின் இடையில் திரு. நாசர் அவர்கள் மேடைக்கு பேச வந்தார், வந்ததும் தனது ஆதங்கத்தை அப்படியே கொட்டிவிட்டார், ஒரு சிறப்பு விருந்தினர் ஆற்ற வேண்டிய உரையாக இல்லாது ஜித்தா தமிழ் சங்கத்துக்கு அறிவுரை சொல்லவேண்டிய உரையாக ஆக்கிகொண்டார். அவர் பேசும் போது அவையில் ஏகப்பட்ட சலசலப்பு. சில நேரம் பேசாது போய்விடுவாரோ என்று கூட நினைத்தேன். கொஞ்சம் கூட நாகரீகம் தெரியாத ரசிகர்கள் என்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்கள். கடைசியில் அவரும் தமிழிலிருந்து மாறி ஆங்கிலத்தில் தான் பேசினார். ( தமிழ் அல்லாத ரசிகர்கள் வந்திருந்ததும் இதற்கு காரணமாக இருக்கலாமோ? என்னவோ? )

தமிழர்களுக்கான, தமிழ் சங்கம், ஏற்பாடு செய்த தமிழ் கொண்டாட்டத்தில் இதுவரை ஒரு தமிழ் நிகழ்ச்சி கூட வரவில்லை, வந்த நிகழ்ச்சிகளும் கூட தமிழ் அல்லாதவையாக தான் இருக்கின்றன...., இங்கு அவர்கள் ஆடிய சினிமா பாடல்கள் எல்லாம் பெரியவாகளால் பெரியவர்களுக்காக
எழுதப்பட்டவை, அதை அந்த சிறார்கள் ஆடும் போது அதன் அர்த்தம் தெரிந்து தான் ஆடுகிறார்களா? என்று தன் உரையில் ஆதங்கப்பட்டு போனார்.... நிகழ்ச்சியின் இடையிலேயே அரங்கத்திலிருந்து காணாமலும் போயிவிட்டார்.

இப்படியாக ஜித்தா தமிழ் சங்கத்தின் இந்தி நிகழ்ச்சிகள் யாவும் இரவு 11.30 மணியளவில் முடிவுபெறும் போது அரங்கத்துள் ஒரு கால்வாசிப்பேர் தான் மிஞ்சியிருந்தார்கள். இறுதியாக அரங்கத்துள் தேசிய கீதம் பாடப்பட்டது,

ஆனால் பாருங்கள் அப்போது தான் இருந்த மிச்சப்பேரும் எழுந்து அவரவராக அரங்கத்தை விட்டு வெளியே போக தொடங்கிவிட்டார்கள்.

ஆகா என்னே நாட்டுப்பற்று...!

நானும் எனது நண்பர்களும் மட்டும் கடைசிவரை எழுந்து நின்று விட்டு வெளியில் வந்தோம்.... அப்போது என் நண்பர்கள் சொன்னார்கள்.

"தமிழ் சங்கத்துக்கு வந்ததால் கொஞ்சம் இந்தி கற்றுக்கொண்டோம்"

இது இங்கு மட்டுமில்லை தமிழன் புலம் பெயர்ந்து வாழும் எல்லா
இடங்களிலும் நடக்கிற ஒரு சம்பவம் தான். இதற்கு காரணம் என்ன யாருக்காவது தெரியுமா?...

ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் தமிழன், தமிழ் கலாச்சராம், தமிழ் மொழியென்று என்று ஏதேதோ "பினாத்தல்கள் குழந்தைகள்" மட்டும் தினம் பிறந்த வண்ணம் இருக்கிறது.

வாழ்க தமிழ்!

அக்டோபர் 02, 2005

போங்க போங்க புண்ணாக்குகளா!

இது கொஞ்சம் கொ(ப)ச்சையாக தெரியும் ஆகவே கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்,

என்னமோ தெரியவில்லை நெய்வேலியின் இரண்டு பதிவுகளை
பார்த்ததும் எனக்கும் இத பத்தி ஏதாவது கிறுக்கனும்முன்னு தோணிச்சு ஆனாலும் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.

முதலாம், மற்றும் இரண்டாம் பதிவுகளை பார்க்க...

இது முழுக்க முழுக்க எனது கருத்து இது நான் யோசித்து பார்த்ததில் கிடைத்தவை. பயங்கரமான பின்னூட்டங்கள், வசைகள் மற்றும் துற்றுதல், ஏச்சுகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன், ஆனால் என்ன செய்ய உண்மை இப்படியாக இருக்குமானால் என்ன செய்வது?

போன வாரம் Talk of the town என்னன்னா? குஷ்பு குஷ்பு குஷ்பு.... எங்கும் குஷ்பு! எதிலும் குஷ்பு!

அது சரி குஷ்பு கூறிய அல்லது சொன்னதின் உள்கருத்து என்ன?....
விச்சு அவர்களின் பதிவின் படி.....

1 // ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும்//.

2 //கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான்.//

3 //...ஆனால், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.//

இப்ப இது தான் பிரச்சினை நமது பெண்களின் கற்பு என்பதும், தமிழனின் கலாச்சாரம் என்பதும் பெண்களின் பிறப்பு உறுப்பிலா நிச்சயிக்கபட்டுள்ளது?. பார்த்தால் எல்லாரும் அப்படி தான் பேசுகிறமாதிரி தெரியுது.

1. பெண்ணின் கற்பு என்பது அவளது பிறப்பபு உறுப்பில் இருக்கும் மெல்லிய சவ்வான கன்னித்திரையில் தான் தங்கியுள்ளது, என்று கலாச்சாரம் என்ற பெயரில் நமக்கு ஊட்டப்பட்டிருக்கிறது போலும்.

தற்கால நிலையில் ஒரு பெண் தனது கன்னிதன்மையை இலகுவில் இழந்து விடகூடிய அநேக சந்தர்ப்பங்கள் உண்டு..... அதற்கு உடலுறவு தான் அவசியம் என்று இல்லை.

விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றல், அதற்கான கடும் பயிற்சியில் ஈடுபடல், சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், உடற்பயிற்சி.... இப்படியாக தற்கால வாழ்வியலில் அநேக சந்தர்ப்பங்கள் உண்டு.... ( இது நான் சொல்லவில்லை மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது) அப்படியே இல்லையென்றாலும்.... சுய இன்பம் அப்படின்னு ஒன்னு இருக்கிறதே!... அதில் ஈடுபடும் பெண்களுக்கும் அது கிழிந்து தான் போகும் என்று மருத்துவ ரீதியாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள்.....

ஆகவே இம்மாதிரியான சந்தர்பங்களினால் அவளது கன்னத்திரை கிழிந்திருந்தால்.... அப்போது அவள் கற்பு இல்லாதவள் என்று ஆகிவிடுமா?

இதற்காககூட குஷ்பு " ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும்......." என்று சொல்லியிருக்கலாம்.


2. அடுத்ததை கொஞ்சம் விபரமாக பார்ப்போமானால், இந்த செக்ஸ் (அதாவது உடலுறவு) என்பது உலகில் உள்ள எல்லா உயிரினங்களில் மனித இனத்திடம் மட்டுமே இவ்வளவிற்கு செல்வாக்கு செலுத்தும் ஒன்றாக இருக்கிறது. மற்ற உயிரினங்களிடத்தில் அந்த செயற்பாடு ஒரு இனபெருக்க செய்றபாடே ஒழிய வேறில்லை. ஆனால் மனிதனிடத்தில் அப்படியில்லை அது தான் வாழ்கையின் பெரும் பங்கு வகிக்கிறது என்றாலும் மிகையில்லை. காரணம் மனித மனங்களின் நிறைவு காணாத ஒரு செயற்பாடு. அதனால் தானே இத்தனை மருந்துகள், மாத்திரைகள்...விளம்பரங்கள்... இத்தியாதி இத்தியாதி எல்லாம்.

செக்ஸில் திருப்தி அல்லது நிறைவு என்று ஒரு வார்தை வருகிறது, இதில் ஆண் பெண் இருபாலாருக்கும் அநேக முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன.
காரணம் செக்ஸ் பற்றிய அறிவார்ந்த கல்வியும், கண்ணோட்டமும் ஆண் பெண் பரஸ்பர கருத்து பரிமாரல் இல்லாதது தான். மற்றது உடலுறவு காலஎல்லை என்பதும் ஆண் பெண் இருபாலாருக்கும் இடையில் அநேக இடைவெளி உள்ளது என்று வைத்திய ஆராய்ச்சிகளே கூறுகின்றன. ஆக இந்த செக்ஸ் விவகாரம் தான் ஆண்கள் பெண்களை அடிமைபடுத்தி வைத்திருக்க நினைகிறது என்று எண்ண தோன்றுகிறது...

மேலும் இன்றைய உலகில் ஆண் பெண் திருமன வயது என்பது எத்தனை என்பதை சற்று யோசிக்க வேண்டும், அது வரை இருபாலாரும் எப்படி தனக்குறிய உடல் மாற்றத்தால் வரும் உணர்ச்சிகளை எந்த அளவுக்கு கட்டுப்படுத்த முடியும்?... ஏனெனில் இப்போதைய உலகம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த சொல்லிகொடுக்க முனைவதில்லை, மாறாக உசுப்பிவிடுகின்றன... இதற்கு நம் தமிழ் சினிமா ஒன்று போதும் வேறு தேவையில்லை, இருந்தாலும் உலகம் இப்போது எல்லாவற்றிலும் மிக வேகமாக வளாந்து விட்ட நிலையில், பலஆயிரம் மைலுக்கப்பால் உள்ள அடுத்தவரின் வாழ்கை முறை கூட நமது நடுவீட்டில் வந்து உட்கார்ந்து விவாதம் பண்ணகூடிய கால வேகத்தில் ஊடகங்கள் இருக்கும் போது,

ஆண்கள்... வெளியில் தெரியாமல் தமது காரியத்தை கன கச்சிதமாக முடித்துக்கொள்வார்கள் ... (அதாவது வடிகால் தேடிக்கொள்வார்கள்) பெண்கள்... அவர்களும் மனிதர்கள் தானே!... அவர்கள் உடலிலும் ஓடுவது நமது குருதிக்கொப்பான குருதி தானே! அவர்களுக்கு உணாச்சிகள் இருக்காதா?... ஆசைகள் இருக்காதா?... ஒரு வேளை தனது சுயகட்டுப்பாடுகளிலிருந்து வெளி வர நேர்ந்தால், அதற்காக கவனக்குறைவாக இருந்து நோயை தேடிக்கொள்ளாமல் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும் சொல்லப்பட்டிருக்கலாம்.

இதற்காக எல்லாரும் இப்படி இருக்க வேண்டும் என்பதில்லை யாரோ ஒருத்தி சொன்னாள் அதனால் செய்வோம் என்று எல்லாரும் செய்வோமா?... இல்லையே!

நமது புத்திக்கும் தெரியும் எது நல்லது எது கெட்டது என்று. கட்டுபாடுகளுடன் மனதை ஒருவழிப்படுத்தி இருக்கிறவர்கள் அல்லது அப்படிதான் இருக்கவேண்டும் என நினைப்பவர்கள் அப்படி இருக்கட்டும். வடிகால் வேண்டும் என்று நினைப்பவர்கள் முட்டாள் தனமாக இல்லாது பாதுகாப்பாக இருக்கட்டும் என்றும் கூட எடுத்துக்கொள்ளலாம்.

இதற்காக கலாச்சாரம், அது இது என்று அரசியல் செய்கிறோம் அல்லது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். உண்மைகளை யதார்த்ததை உணர்வதில்லை... ஏதாவது சாக்கு போக்கு சொல்ல வேண்டியது இல்லை கலாசாரம் கற்பு என்று அதன் பின்னால் ஒளிந்து கொள்வது....

உன் வாழ்கையை நீ முடிவு செய்... அதனால் வரும் விளைவுகளுக்கு நீ மட்டுமே பொறுப்பாயிரு என்று சொன்னால் போதாதா?

யாராவது ஒரு பெண் சொன்னாள் என்பதற்காக நமது பண்பாடு அழிந்து விடுமா?... அப்படியானால் அது என்ன பண்பாடு?.. புண்ணாக்கு பண்பாடு.

நான் நினைப்பது என்னவென்றால் இந்த ஆணாதிக்க சமுகத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் ஒரு பெண் திருமணத்திற்கு முன் உடலுறவில் அனுபவம் உள்ளவளாக இருந்தால், எங்கே தன்னோடு உறவில் இருக்கும் போது அந்த பெண் முன்னைய அனுபவத்தை இப்போது ஒப்பிட்டு பார்த்து தன்னை எடைபோடக் கூடும் என்ற பயஉணர்வாக இருக்குமோ? என்று எண்ண தோன்றுகிறது?. (கொஞ்சம் விரசமாக இருக்கிறது இல்லையா? என்ன செய்ய வெளிப்படையாக பேச முனைந்தால் இப்படியெல்லாம் பேச/எழுத வேண்டி வருவதை தவிர்க்க முடியவில்லை).

காரணம் நம் சமூக அமைப்பு அப்படி. மனித மனம் என்பது ஒரு சிக்கலுக்குறிய ஒரு விடயம், அதனால் தான் " மனம் ஒரு குரங்கு" என்று சொல்லியிருக்கிறார்கள், எதுவும் நடக்கலாம்.

இதனால் அவளின் போக்கு மாறலாம். அப்படி ஆகும் பட்சத்தில் தனது விருப்பபடி அவள் வேறு ஆண்களை நாடிவிட்டால், அப்போது நமக்கு சமூகத்தில் இருக்கும் அல்லது நம்மால் ஏற்படுத்தபட்டிருக்கும் நமது நிலை குறித்து விமர்சனம் செய்யப்படலாம் என்ற காரணமாகவும் இருக்கலாம்.( இதற்காக தான் சும்மா சும்மா காட்டு கூச்சல் போடுறாங்கன்னு தோனுது).

மனிதனை அவ்வாறு செய்ய தூண்டாது இருக்கவும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை கடைபிடிக்கவும் கலாச்சாரம், பண்பாடு என்கிற கோட்பாடுகள் சட்டங்கள் கீழ் முன்னோர்கள் கட்டிப்போட்டிருக்கிறார்கள். கூடிய வரையில் ஆண் பெண் இருபாலாரையும் திருமணத்துக்கு முன் உடலுறவு கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இதில் ஆண்கள் பெரும்பாலும் வேலி தாண்டினாலும் தப்பித்துக்கொள்கிறார்கள்... ஆனால் பெண்கள் அவ்வாறு இல்லை..

இங்கு எல்லாம் அரசியல் ஆக்கப்பட்டு இருக்கிறது, பெண் விடுதலை என்று பேசுகிறவர்கள்... எல்லாரும் சும்மா ஒப்புக்கு தானே ஒழிய மனதறிந்து அதில் ஒன்றுபடுவதில்லை.

இப்போது கூட இந்த விடயத்தில் எவ்வளவு கருத்துகள்... ஆமோதிப்புகள், வெறுப்புகள், விமர்சனங்கள், எல்லாம் வருகின்றன இது கூட ஒரு விதத்தில் நல்லது தான், ஏனென்றால் நாலையும் கண்டு கேட்டு பட்டு அறிந்து ஒரு தெளிந்த சமூகம் உருவாகலாம்.

ஆக அதை விடுத்து குழம்பிய குட்டையில் மீன் பிடித்து அரசியல் பண்ணி, கூட்டம் சேர்த்துகொண்டு ஆளாளுக்கு அடித்துகொண்டோமானால்,...
யாருக்கு லாபம். இதை மற்றவர்கள் பார்த்தால் சிரிப்பா சிரிப்பார்கள். பார்த்தாயா தமிழனின் சிந்தனைகளை என்று சொல்லி....,

இது போல் குறுகிய சிந்தனைக்குள் தழினை, தமிழனே வைத்திருப்பதால் அல்லது வைத்திருக்க முனைவதால் தான் மாற்றான் தமிழனை அவன் தலையிலேயே மிளகாய் அறைத்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.

அப்படியானால் நமது சமுகம் அழிந்து விடும் அப்படி இப்படின்னு ஒரு சிலர் புருடா விடலாம்... அப்படி நடக்க சான்சே இல்லை, உதாரணமாக அமெரிக்காவை எடுத்துககொள்ளுங்கள், அது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, ஜாதிக்கோ, மதத்திற்கோ என்று இல்லாது தனி மனித சுதந்திரத்தை விரும்பும் பல்லின மக்கள் ஒன்று கூடி வாழும் மக்கள் உள்ள நாடு. அதில் எம்மை விட பிரச்சினைகள் அரசியல் சித்துகள் என ஏராளம் இருக்கின்றன... ஆனால் கலாச்சாரம் பண்பாடு என்று பொய் முகமூடி போட்டு யாரும் இருப்பதில்லை.

அதனால் தான் அந்த நாடு இன்னும் உலகில் வல்லரசாக இருந்தாலும், இன்னமும் கூட முழுப்பூமி பந்தையே தன் காலுக்டியில் கொண்டு வரவேண்டும் என்று கங்கணம் கட்டிகொண்டு செயல்படுகிறது, அதுவும் நம்மல மாதிரி, கற்பு, கலாச்சாரம், கன்னித்தன்மைன்னு, வேஷம் போட்டுக்கொண்டிருந்தால் இன்னமும் நம்மல மாதிரி தான் எல்லாத்துக்கும் அடுத்தவரை கையேந்தி கொண்டு தான் நின்றுகொண்டிருந்து இருக்கும்.
அட போங்கப்பா புண்ணாக்கு போயி வேலைய பாருங்க!...

ஒங்களோட இந்த கூச்சலுக்கு பயந்து வேணாம்முடா சாமின்னு வெளிநாட்டுகளுக்கு போய் அங்கு குடியேரும் நம்ம இளைய சனங்கள் நம்ம ஊரிலேயே இருந்து உழைக்கவும் இந்த உழைப்பினால் ஊருக்கும் ஏதாவது வழி பிறக்க வைக்க முடியுமான்னு பாருங்க. எத்தனை ஆயிரம் ஏழை குழந்தைகள் படிக்க முடியாது இருக்காங்க அதுக்கு வழி இருக்கா பாருங்க! எத்தனை பேர் கால் வயத்து கஞ்சி கிடைக்காது அல்லல் படுறாங்க அவுங்களுக்கு ஏதாவது செய்யுங்க... எத்தனை ஆயிரம் வாழ வழி தெரியாது, அல்லது இல்லாது தடுமாறுது அதுக்கு ஏதாவது செய்ய பாருங்க!

வறுமை தாங்காது தனது உடல் அவயவங்களையே விற்க வரும் நமது சமுகத்துக்கு ஏதாவது செய்யபாருங்க.

மற்றவர்கள் எல்லாம், குறிப்பா எல்லா வெளிநாடுகளிளுமே தமிழன் என்றால் எல்லாரும் ரொம்ப இலக்காரமா பார்கிற நிலையில இருந்து தமிழையும் தமிழனையும் மீட்க ஏதாவது செய்ய முடியுமான்னு பாருங்க...

அத வுட்டுப்புட்டு கற்பு, கன்னிதன்மை, அப்டின்னுகிட்டு. அப்படி என்னய்யா தமிழனின் கலாச்சாரம் மட்டும் என்ன கவட்டிக்குள்ளயா இருக்கு?....

தூற்றுவோர் தூற்றட்டும்
போற்றுவோர் போற்றட்டும்
நீ
நீயாக இரு!....

இத பத்தி இதே மாதிரி கருத்தை கூத்தாடி கூட சொல்லியிருக்கார், போயி பாருங்க!

அப்புறம் என்னை திட்டி தீக்கிற வழிய பாருங்க!
வாழ்க தமிழன்!