செப்டம்பர் 13, 2005

உலகம் என்னாகும்!

கடந்த சனிக்கிழமையன்று BBC தொலைகாட்சியில் பாஸ்லான் குழந்தைகள் "Children of Baslen" என்ற ஒரு நினைவு நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன்.

கடந்த வருடம் செப்டம்பர் மாத தொடக்கத்தில் ரஷ்யாவின் பாஸ்லான் என்ற சிறிய நகரத்து பாடசாலையொன்றில் விடுதலைக்கான போராட்டம் என்ற பெயரில் வெறிப்பிடித்தாடி ஏறக்குறைய 700 பேரை கொன்று தீர்த்த (அதில் சிறுவர் சிறுமியர் மட்டும் 300 பேர் வரையில் என்று கூறப்படுகிறது) ஒரு அகோர சம்பவத்தை நினைவு கூறும் முகமாக, அந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த அந்த பிஞ்சு குழந்தைகளை விட்டு அந்த கோர மணித்தியாலங்களை நினைவுபடுத்தி பார்த்திருந்தது அந்த நிகழ்ச்சி.....

நிகழ்ச்சி என்ன சொன்னது என்பது பின்னால் பார்க்கலாம். ஆனால்...,!

அந்த துயர மணித்தியாலங்களை, கொலைபிசாசு தாண்டவமாடிய அந்த நேரத்தை அந்த பிஞ்சு உள்ளங்கள் மறந்து, மீண்டும் அவர்களின் மனசு தெளிய முனையும் இந்த வேளையில், அதே பிள்ளைகளை விட்டு அந்த வெறியாட்ட நிகழ்ச்சியை அவர்களுக்கு நினைவு படுத்தியது.... சரியா தவறா என்பதில் எல்லாருக்கும் ஒரு பொதுவான கருத்து இருக்குமா? தெரியவில்லை.

ஆனால் என்னை பொறுத்தவரை அந்த பிஞ்சு பூக்களுக்கு திரும்பவும் அந்த நிகழ்ச்சியை ஞாபகமூட்டியது தவறு என்றே படுகிறது.... பாவம் அந்த பால்மணம் மாறா சின்னஞ்சிறுசுகள்.... ஒரேயொரு சிறுவனை தவிர மற்றவாகள் எல்லோரும் இன்னமும் பயத்துடனும், சோகத்துடனும் தான் பேசினார்கள். எல்லாரும் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்று மட்டும் சொல்லலாம்.

ஒரு தலைசிறந்த ஊடக நிறுவனமாக கொள்ளப்படும் பிபிசி இப்படி ஒரு நிகழ்ச்சியை தயாரித்துள்ளது பெறும் வியப்பு.... !!!!

குழந்தைகளின் மனோநிலை என்னவாகும்?, படிப்படியாக பழசை மறக்க தொடங்கும் ஒரு நிலையில், திரும்பவும் அதை கிளறிவிட்டால் அவர்கள் எந்த வகையில் அதை தாங்கிகொள்வார்கள், என்று BBCக்கு கொஞ்சம் கூட நினைக்க தெரியாமல் போனது தான் எப்படி என்று விளங்கவில்லை.

இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த எத்தனை பெரியவர்கள் இருக்கிறார்கள்,
அவர்களை அழைத்து அந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தியிருக்கலாமே.....! ஏன் இந்த பிஞ்சுகளை அஞ்சலி என்ற பெயரில் கொதி தண்ணீருக்குள் மீண்டும் போட வேண்டும்?

குழந்தைகள் ஒன்றும் திரித்து சொல்லமாட்டார்கள்.... உள்ளதை உள்ளபடியே சொல்வார்கள் என்று நினைத்து இருக்கலாம்..., ஆனால் அந்த பிஞ்சு மனங்களை மீண்டும் கீறி காயப்படுத்துவதில் அந்த சிறார்கள் என்ன ஆவார்கள் என்று யோசிக்க முடியவில்லையா...,? அல்லது பயங்கரவாத்திற்கெதிரான போர் என்ற பெயரில் உலக அரங்கில் அனுதாபம் பெற செய்த திட்டமிட்ட கைங்கரியமா?..... யார் என்னவானால் எனக்கென்ன நான் நினைத்தது நடந்தால் சரியென்ற ஏகாதிபத்திய எண்ணம் கொண்ட ஆட்சிகளின் தூண்டலா?

உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் மனிதம் தெரிந்த, மனித நேயம் கொண்ட, எந்த மனிதனும் மனித கொலைகளை இனம், மொழி, நாடு, மதம், நிறம், சாதி என்பன துறந்து கண்டிக்க தவறுவதில்லை, அதுவும் அந்த கொலைகளை எந்த சட்டை போர்த்தி யார் செய்தாலும். ( நான் மட்டும் தான் இப்படி ஒரு கோக்கு மாக்கு நெனப்புல இருக்கிறோனோ? தெரியலீங்க!).

மேலும் இந்தமாதிரியான ஒரு நிகழ்ச்சியால் தான் பயங்கரவாத்தை உலகிற்கு வெளிகாட்டனும் என்ற அவசியம் இருந்தால், இந்த உலகம் சீக்கிரம் அழிந்தால் மிகவும் நல்லது என்றுதான் தோன்றுகிறது இந்த கிறுக்கனுக்கு.

பெரியவர்கள் நடத்தும்
பலப்பரீட்சையின் காலடியில்
பாவம் அந்த
பிஞ்சு மலர்கள்!


சரி..., நடந்தது நடந்து போச்சி...

இனி அந்த கோர சம்பவம் எப்படி இருந்தது என்று பார்த்தால்..... ஏன் மனிதன் இப்படி ஆகிவிட்டான் என்று ரொம்பவும் வியப்பாகவும் பயமாகவும் இருக்கிறது. எங்கு பார்த்தாலும், எதை பார்த்தாலும் கொலை அல்லது கொல்!.... ச்சே!...... என்ன உலகமோ தெரியவில்லை. நான் அப்படியே நிகழ்சியை பார்த்துகொண்டிருக்கிற போது அழுது விட்டேன்.

இனிமேல் எனக்குள் இருக்கும் கொஞ்ச கடவுள் நம்பிக்கையும் அப்படியே அற்றுவிடும் போலிருக்கிறது.... எல்லா கடவுள்களும் பொய்... கடவுள் என்று ஒன்று இருந்தால் இப்படி? நடக்குமா?... அந்த பிஞ்சுகள் என்ன பாவம் செய்தன?....

அந்த வெறித்தனம், அந்த காட்டுமிராண்டிதனத்தை ( இதை எந்த சொல் கொண்டு சொன்னால் அது மொத்த அர்த்தப்படும் என்று தெரியவில்லை), எல்லாரும் அறிந்தார்களா தெரியவில்லை..... எதிர்கால உலகம் என்னவாகும் என்று உண்மையிலேயே கவலை கொள்ளும் ஒரு சில அன்பர்களாவது தெரிந்து கொள்ளட்டும் என்று தான் கீழே வருபவற்றை எழுத விழைகிறேன்.

அந்த பிஞ்சுகள் பேசிய.... பாதி அழுகையும்... பாதி பயமும்... கலந்த வார்தைகளில் சில...

"எங்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை, எங்களால் தாங்க முடியாத நேரத்தில் மற்றவரின் சிறுநீரை அருந்த தொடங்கினோம்"... என்கிறாள் ஒரு சிறுமி.

"அதிலும் ஒரு பெண்மணி தனது சிறு நீரை தந்த போது அதை குடிக்க கூட எனக்கு உனக்கு என்று அதிக போட்டிகள்"..... என்று இன்னொறு சிறுமி.

"அந்த பயங்கரவாத கூட்டத்திற்குள் ஒரு பெண் இருந்தாள்.... அவள் ஒரு போத்தல் தண்ணீரை எடுத்து பக்கத்தில் தண்ணீர் கேட்ட சிறுமிக்கு கொடுத்திருக்கிறாள்... அதை அந்த கூட்டத்து தலைவன் பார்த்து விட்டானாம், உடனே அவனது கையிலிருந்த ரிமோடடை இயக்கி அந்த பெண்ணை அந்த இடத்திலேயே வெடிக்க செய்து விட்டானாம், அவள் தற்கொலை குண்டுதாரியாக இருந்தாளாம் "... என்று இன்னுமோர் சிறுமி.

"தன்னிடம் 15 ரூபிள் பணம் இருந்ததாகவும், அதை தான் தருவதாகவும் தன் தாய் சுகமில்லாது இருப்பதால் அவரை விடுதலை செய்யும்படி தீவிரவாதியிடம் வேண்டிதாகவும்"... ஒரு சிறுவன் சொன்னான்.

"கடும் சண்டையின் நடுவே இன்னோர் தாய் தன் மகளை தப்பியோடும்படி சொல்லி உதவிடும் நேரத்தில் சுடப்படுகிறார்".... அந்த நேரத்திலும் அவர் மகளே ஓடு ஓடு என்று தான் கத்தினாராம்... அதை அந்த மகளே சொல்கிறாள்...

இன்னோர் சிறுமி "தான் தப்பி வெளியில் வந்து விட்டாராம்..., ஆனால் தனது தாயை தேட வேண்டும் என்று மீண்டும் ஜன்னல் ஏறி உள்ளே போக முயற்சித்தாராம், அப்போது ஒரு குண்டு வெடிக்க வெளியில் தூக்கி எறியப்பட்டுவிட்டாளாம்"....

இப்படியாக கோரப்பேய்கள் ஆடிய தாண்டவ கதைகள் ஏராளம், வேண்டாம் என்னால் சொல்லவும் முடியாது, எழுதவும் முடியாது....

இனி, பாருங்கள் அந்த பிஞ்சு உள்ளங்களில் எப்படி குரூரம் விதைக்கபட்டுவிட்டது என்று.....

...... ஒரு சிறுவன் "நான் எதிர்காலத்தில் ஒரு ஜனாதிபதியாக வருவேன்... அப்படி வந்தால் தீவிரவாதிகளை கொல்வது தான் என் வேலை என்கிறான்.

நான் தீவிரவாதிகளை படமாக வரைந்து அவற்றை தாறுமாறாக கிழித்து தீவைத்து திருப்திபடுகிறேன்... ஆனால் எனக்கு இது போதாது... இன்னும் ஏதாவது அதிகம் செய்து அவர்களை பழிதீர்க்க வேண்டும்..... என்று ஒரு சிறுமி சொல்கிறாள்.

எனக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லை, எனக்கு ரஷ்யா மீதும் அதன் ராணுவத்தின் மீதும் தான் நம்பிக்கை அதிகம்.... என்று இன்னொறு சிறுவன் சொல்கிறான்.

நான் பெரிய ஆளாக ஆனதும் செச்னியாவிற்கு போய் அந்த தீவிரவாதிகளை பழிதீர்ப்பேன் என்கிறான் இன்னொறு சிறுவன்.

இன்னொறுவன் சொல்கிறான்... "அவர்கள் உள்ளே வந்ததும் மேலே வானத்தை நோக்கி சுட்டார்கள்... நான் பயப்படவில்லை மாறாக சந்தோஷப்பட்டேன் ஏனென்றால் அவர்களது துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்துவிடுமே என்று".....

பாருங்கள் எதிர்கால சந்ததி, சமுதாய தலைவர்கள், என்று உலகம் எதிர்பார்க்கிற இந்த சின்னஞ்சிறார்கள்.... எப்படியான சூழலில் வளர்கிறார்கள்... அல்லது வளர்க்கப்படுகிறார்கள் என்று. இதற்கு தான் நான் மேலேயே சொன்னேன், இந்த உலகம் சீக்கிரம் அழிந்தால் நல்லது என்று.

இதில் நான் அந்த பாஸ்லான் குழந்தைகளை மட்டுமே சொல்லியிருக்கிறேன், ஆனாலும் வெளியில் தெரியாமல் அல்லது யாராலும் வெளி உலகுக்கு காட்டப்படாமல் நமக்கு தெரியாமல் இந்த பூமியில் எத்தனை ஆயிரம் பிஞ்சு மணங்கள்... எத்தனையாயிரம் துயரங்களை கொண்டு வாழ்கின்றன... எத்தனை நூறு பேர்கள் மடிந்து போகிறார்கள்..., அல்லது மடிந்து கொண்டிருக்கிறார்கள். யாருக்காவது தெரிகிறதா?

எத்தனை எத்தனை விடுதலை போராட்ட கூட்டங்கள், எத்தனை பணக்கார அரசியல் ஆட்சிகள், வல்லாதிக்க அரசியல்கள், நாடுகள், நிறுவனங்கள், மக்கள் அமைப்புகள்... மதம் பேசித்திரியும் கூட்டங்கள், ஆனால் யாராவது இதைப்பற்றி யோசிக்கிறார்களா?

அறிவியல் என்கிறோம், விஞ்ஞானம் என்கிறோம், தொழில் நுட்பம் என்கிறோம் பூமியை விட்டு வெளியே என்ன இருக்கு என்பதில் ஆர்வம் காட்டுகிறோம்.... கம்பூட்டர் என்கிறோம், அரசியல் புதுமையென்கிறோம், புரட்சியென்கிறோம்.

ஆனால் எதிர்காலம் என்பது பூமிக்கு கானல் நீராகிவிடுமோ? என்று தான் எண்ணவைக்கிறது.....!

செப்டம்பர் 04, 2005

இதோ ஒரு உண்மை சம்பவம், (பகுதி இரண்டு)

அவசர காலசட்டமும் தமிழர் படும் பாடும்
என்ற பதிவின் தொடர்ச்சி....

......நான் வெளியில் அமர்ந்திருந்த அந்த தாயிடம் பேச்சு கொடுத்தேன் அவர் சொன்ன தகவல் பெரும் அதிர்ச்சியை தந்தது, அவர் கிளிநொச்சியை சேர்ந்தவர், மறுநாள் காலை அவரது இளைய மகளுக்கு ஏதோ தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக போக வேண்டும், அவருக்கு இதயத்தில் ரத்த ஓட்ட பகுதியில் ஏதோ சிகிச்சையாம். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அவர்கள் அன்று மாலையில் தான் கொழும்பிற்கே வந்திருக்கிறார்கள், "அதற்குள் அவசரகால சட்டம் அதன் வேலையை காட்டிவிட்டது".

அந்த தாய் எங்கள் ஊர் பேர் விபரம் எல்லாம் கேட்டார், மிகவும் அன்பாக பேசினார். பின்னர் சொன்னார் " என்ன தம்பி இப்படி ஜோக் அடித்து கொண்டிருக்கிறீங்கள்..., பேசாம உட்கார்ந்து பிராத்தனை பண்ணுங்கள் கெதியா வீட்டுக்கு அனுப்ப வேணும் என்று. நான் சொன்னேன் கடவுள் வருவதாய் இருந்தால் அவர் கொழும்பில் எத்தனை ஜெயிலுக்கு தான் போவார் என்று...

எனக்கு என் மன நிலையை சொல்ல வார்தையில்லை, மனதில் சோர்வு, ஒரு வித பயம்.... எங்களை 29ம் திகதிக்குள் வெளியில் விடுவார்களா?.... இசை நிகழ்ச்சிக்கு போக முடியுமா? என்ற எண்ணம் வேறு. மேலும் எல்லாரும் நின்ற நிலை, உட்கார முடியாது காரணம் இடம் காணாது, எவ்வளவு நேரம் தான் நிற்க முடியும் பிறகு ஒவ்வொருவராக மாறி மாறி அந்த தரையில் அமர்ந்து எழ தொடங்கினோம். விடிய ஒரு ஐந்து மணியிருக்கும் நான் அப்படியே தரையில் அமர்ந்தேன், சுவரில் சாய்ந்து தூங்கிவிட்டேன்.

இரண்டாவது நாள் காலையிலேயே எங்கள் முத்த சகோதரரின் கடையில் இருக்கும் அவரது உதவியாளாகள் விடயம் கேள்விப்பட்டு ஓடி வந்து விட்டார்கள், அவர்கள் போய் அந்த நிலைய பொறுப்பதிகாரியிடம் கேட்ட போது அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒரு சில விசரணைகள் இருக்கும் அது முடிந்ததும் அனுப்பிவிடுவோம் என்று.

சாப்பாடு இல்லை, குடிக்க தண்ணீர் கிடையாது, அப்படியே உறவினர்கள் எங்களை பார்க்க வருபவர்கள் ஏதாவது வாங்கி வந்தாலும் சாப்பிட முடியாது, அந்த சூழல் அப்படி...., மேலும் வாழ்கையில் முதல் அனுபவம், போலீஸ், கைது, சிறையென்று,

ஆனால் 29ம் திகதி அன்று காலை ஒருவரை கைது செய்து வந்து எங்களுடன் சிறையில் இட்டார்கள், வந்தவர் எங்கள் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தார் அப்போது எங்கள் மத்தியில் இருந்த இன்னொரு இளைஞரை அடையாளம் கண்டு கொண்டார்..... இருவரும் சிங்களத்தில் உரையாடிக்கொள்கிறார்கள். அதிலிருந்து நான் தெரிந்து கொண்டவை அந்த இருவரும் மக்களிடம் பணப்பை திருடும் வழக்கத்தை கொண்டவர்கள், (பிக்பொக்கட் என்று தமிழில் சொன்னாதானே விளங்கும் இல்லீங்களா? ).

பிறகு நடந்தது தான் வேடிக்கை, வந்தவர் உரக்க தமிழும் சிங்களமும் கலந்து சொல்கிறார் " மே மினிசு புலி நெவே! எலி!....,
புலி இன்னே கெலே!, மூங் எலி! அப்பராதே பாங், மூவ கெனல்லா தியேன்னே".

அதாவது "ஏய் இவர்கள் எல்லாம் புலி இல்லை சாதாரண எலி, புலியெல்லாம் காட்டுக்குள்ளே இருக்கு அநியாயமா போய் எலியை பிடித்து வந்திருக்கிறீர்களே" என்று கிண்டலாக சொன்னார். கிண்டலில் கூட உண்மை இருக்க தான் செய்தது.

கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் கையில் ஒரு குழந்தையுடன் ஓடி வந்தார்... வந்தவரின் மனைவி என்று பிறகு புரிந்தது. வந்தவர் கம்பிகளுக்கருகில் நின்று அழுதார், அதற்கு அந்த நபர் சொன்னார், இதை அப்படியே தமிழ் படுத்தியிருக்கிறேன் சிங்களம் வேண்டாம்!

" இந்தா இங்க ஒன்னும் அழுவ வேணாம், நான் இன்னும் ஐந்து நாட்களில் வந்து விடுவேன், என்ன சரியா? இந்தா அதுவரை செலவுக்கு பணம் என்று ஏதோ கொஞ்சம் பண நோட்டுகளை சுருட்டி அவர் கையில் திணித்தார், பிறகு அந்த பெண் குளிர் பானமும், ஏதோ சாப்பிட சிற்றுண்டியையும் ஒரு 3 சிகரெட்டையும், ஒரு சாரமும் ஒரு பையில் வைத்திருந்து கொடுத்தார், அதை வாங்கிக்கொண்ட நபர், சரி சரி போயிட்டு வா, ஒன்னுக்கும் யோசிக்காதே ! நான் வந்து விடுவேன் என்றார்.... எனக்குள் ஆச்சர்யம் என்ன ஒரு உறுதியான நம்பிக்கை.

இவரை கற்பனை செய்து கொள்ள நமது தமிழ் திரைப்படங்களில் தலைவாசல் விஜய் சேரி பாத்திரம் ஏற்று நடிக்கும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை நினைத்து கொண்டால் போதும். கன கச்சிதமாக பொருந்தும். மகளிர் மட்டும் படத்தில் வரும் பாத்திரம் அப்படியே.

பிறகு அவர் என்ன செய்தார் தெரியுமா?... உடனே உள்ளே இருக்கும் கழிப்பழறைக்கு போய் தான் கட்டியிருந்த சாரத்தை (லுங்கியை) அவிழ்த்தார். நிலத்திலிருந்து இரண்டடி உயரம் மட்டுமே கொண்ட தண்ணீர் குழாயை திறந்து சாவகாசமாக குளித்தார்.... திரும்பி வந்தார் மனைவி தந்திருந்த லுங்கியை எடுத்து தலையை துவட்டிக்ககொண்டு அதையே கட்டிக்கொண்டார்.

பிறகு எங்கள் எல்லாரையும் முன்னால் இருக்கும் சிறைக்கதவை மறைத்து நிற்கும் படி சொல்லவே நாங்களும் நின்றோம், உடனே அவரும் அவர் கூட்டாளியும் ஒன்றாக உட்கார்ந்தார்கள், அவர் ஒரு சிகரெட்டை எடுத்தார், மற்றவர் தனது இடுப்பில் இருந்து ஏதோ ஒரு மிகச்சிறிய பொட்டலம் ஒன்றை எடுத்தார், முதலாமவர் சிகரெட்டை பற்றவைத்தார், மற்றவர் பொட்டலத்தை விரிததார்............,

என்ன நடக்கிறது என்று பர்க்க வேண்டும் என்ற ஆவலில் நான் லேசாக திரும்பி அவர்களை பர்ர்த்தேன் உடனே முதலாமவர், என்னை தன் பக்கம் பார்க்க வேண்டாம் என்று ஓரு அதட்டல் விட்டார், எனக்கு சர்வமும் அடங்கிவிட்டது. எல்லாரும் என்னை பார்த்த பார்வையில் நான் அசடு வழிந்து நின்றேன். பிறகு இருவரும் எழுந்தார்கள், திண்ணையில் ஏறினார்கள் நன்றாக தூங்கிப்போனார்கள். ஆகா! கவலையில்லாத மனிதர்கள் போலும் என்று என் சகோதரனிடம் சொன்னேன்.

...., மாலை 3 மணிக்கு பின்னர் தான் ஒவ்வொருவரையாக வெளியில் கூப்பிட்டு வைத்து விசாரிக்க தொடங்கினார்கள். என்னையும் என் சகோதரனையும் கூப்பிட்ட போது 2வது (29ம் திகதி) நாள், நான் சற்று உணர்ச்சிவசப்பட்டு அழுதே விட்டேன்.

நாங்கள் நினைத்திருந்தோம் ஒரு நாளையில் அனுப்பிவிடுவார்கள் என்று. அப்படியில்லை என்றானபோது ஒருவித பயம் வந்து விட்டது. ஒவ்வொருவரையும் விசரித்து அதனை அவரவர் ஊரில் உள்ள போலீஸ் நிலையத்துடன் ஓப்பீடு செய்து அறிக்கை வந்தால் தான் வெளியில் விடுவார்கள் என்று. உள்ளே எங்களுடன் இருந்த ஒருவர் சொன்னார். அப்படி ஒப்பீடு செய்யும் போது நமது தகவல்களில் ஏதாவது முரணபட்ட பதில்கள் தகவல்கள் இருந்தால் அந்த நபரின் விடுலை தள்ளிப்போடப்படும்..... அப்படி தள்ளிப்போடப்பட்டால், அந்த நபரை இந்த பொலீஸ் நியைத்தில் வைத்திருக்க மாட்டார்கள். வெளிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றி விடுவார்கள் என்றும் மேலதிக தகவலாக சொன்னார்... உண்மையிலேயே எங்களுக்கு வயிற்றில் புளி கரைத்த மாதிரி தான் இருந்தது.

ஒவ்வொருவராக கூப்பிட்டு விசாரிப்புகள் நடந்து கொண்டிருந்தன, நாலைந்து போலீஸார் ஒவ்வொருவரையாக தனித்தனியாக அழைத்து விசரிப்புகளை செய்தார்கள்.

என்னை அழைத்து விசாரித்த உத்தியோகத்தர் மலாய் சமூகத்தை சேர்ந்தவர்
நான் இது வரை அடக்கி வைத்திருந்ததை அப்படியே சற்று உணர்ச்சி பொங்க கொட்டிவிட்டேன், அனால் அவர் எல்லாம் பொறுமையாக கேட்டார்...., கேட்டுவிட்டு சொன்னார் எங்களுக்கு எல்லாம் தெரியும், ஆனாலும் என்ன செய்ய சட்டம் அப்படி..... நாங்கள் எங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுகிறோம் அவ்வளவு தான். என்றார்.


இந்த இடத்தில் நான் விளங்கிக்கொண்டது என்னவெனில் இலங்கையில் அதிகார மட்டத்தில் இருக்கும் எல்லாருக்கும் எல்லா விபரமும் தெரியும், ஆனால் தெரியாதது போல் நடிக்கிறார்கள்.... ஆனால் இந்த நடிப்பை அரங்கேற்ற அப்பாவி தமிழர்கள் தான் கிடைத்திருக்கிறார்கள் அவர்களுக்கு.

பின்னர் அவராகவே பொலீஸ் நிலைய அதிகாரிகளுக்கென உள்ள சிற்றுண்டிச்சாலையில் எனக்கு தேநீர் வாங்கி தந்து, என்னை அங்கேயே அவர்களின் உபயோகத்திற்காக உள்ள கழிப்பறையில் பல் துலக்கி முகம் கழுவ செய்து...., மிகவும் நன்றாக உபசரித்து கண்ணியமாக நடந்து கொண்டார்.... எனக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்று ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருந்தது.

பிறகு விசாரணை ஆரம்பம்....., பிறந்தது எங்கே வாழ்ந்தது அல்லது இப்போது வசிக்கும் இடம். கல்வி பயின்ற பாடசாலை...., நெருங்கிய பாடசாலை நண்பர்கள்..., ஆசிரியர்கள், பிறகு எங்கு வேலை செய்தீர்கள்..., இப்போது என்ன செய்கிறீர்கள்..... தாய் தந்தை யார்?, என்ன தொழில் செய்கிறார்கள்?, சகோதர சகோதரிகள்..., யார்? யார்? என்ன என்ன செய்கிறார்கள்?.... கொழும்புக்கு வந்த நோக்கம்?, தங்கியுள்ள வீட்டின் நிலவரம்? அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு அல்லது உறவு முறை.... அப்பப்பா!... பாதி கேள்விகள் எனக்கு மறந்தும் போய் விட்டது.....

அதற்குள் எங்கள் விடயம் எங்கள் வீட்டிற்கு தெரிந்து எங்கள் வீட்டிலிருந்து எங்கள் பிரதேச போலீஸுக்கு போய் விபரங்களை கொடுத்து எங்களை வெளியில் கொண்டு வர முயற்சிகளை எனது தந்தையார் செய்து கொண்டு இருக்கிறார் என்று எங்களுக்கு தகவல் வந்தது.... கடவுளே ஒரு சிறிய ஆறுதல்.

ஆனாலும் ஏப்பிரல் மாதம் 31ம் திகதி ஆகிவிட்டது, அன்று காலையில் தான் முதன் முதலில் ஒருவரை வெளியில் செல்ல அனுமத்தித்தார்கள். அவர் ஒரு வர்த்தகர் கொழும்பில் பல வருடங்களாக இருப்பவர், வெளிக்கடை சிறை இப்படி இப்படியென எங்கள் வயிற்றில் புளி கரைத்த புண்ணியவான்.

மற்ற யாரையும் விடுவிக்கவில்லை, இப்போது ஒரு புதிய சிக்கல் அடுத்த நாள் மே முதலாம் திகதி. மே தினம்.! ஆகவே எல்லா பொலீஸாரும் வெளியில் கடமைக்கு போகப்போவதாயும் அதனால் எங்கள் எல்லாரையும் அங்கு பொலீஸ் நிலையங்களில் வைக்க மாட்டார்கள் என்றும் அன்று மாலை எல்லாரையும் வெளிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றிவிடுவார்கள் என்று முதல் நாள் வந்திருந்த அந்த திருடன் சொன்னான்.

எனக்கு வாழ்கை முற்றுமாக வெறுத்து விட்டது. ஏனென்றால் மத்திய சிறைச்சாலையென்பது, முற்றிலுமாக வித்தியசமான போக்குகளையும் சூழலையும் கொண்டது. அதற்குள் போனால் பிறகு சுலபமாக வெளியில் வர முடியாது, அதன் பிறகு வக்கீல் வைத்து நீதிமன்றம் போய்... அதை செய்து இதை செய்து தான் வெளியில் வரவேண்டும். எப்படியும் 15 அல்லது 20 நாட்கள் போகும்.

ஆனால் தெயவாதீனமாக எனது தந்தையின் உடனடி நடவடிக்கையால் எங்கள் பிரதேச அரசியல் பிரதிநிதிகள் வழியாக எங்கள் பிரதேச போலீஸ் பொறுப்பதிகாரியே எங்களை தடுத்து வைத்திருந்த மோதரை பொலீஸுக்கு எங்களை பற்றி தகவல் சொல்லி எங்களை வெளியில் அனுப்ப சொல்லிவிட்டார்....,

நேரம் மாலை 5.00 மணியிருக்கும் எல்லாரும் அடுத்து வரபோகும் பெரிய சிக்கலை பயத்துடன் எதிர்பார்த்து இருக்கும் போது, எங்கள் இருவர் பெயரை கூப்பிட்டு திறந்து விட்டதும் யாரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை....,

எங்களுடன் கூட இருந்த யாரிடம் என்ன பேசுவது...., நாங்கள் போகிறோம் என்று கூட சொல்ல முடியாத நிலை. ஏனென்றால் வெளியில் போகும் போது எங்களை உள்ளே இருக்கிறவர்களிடம் பேச விடமாட்டார்கள். நான் எல்லாரிடமும் கண்களாலே சைகை செய்து போகிறோம் என்று சொல்லி வெளியேறினேன். ஆனால் எல்லார் கண்களிலும் தாங்கள் எப்போது விடுவிக்கபடுவோம் என்ற ஒரு ஏக்கம் மட்டும் தான் தெரிந்தது....

வெளியில் வந்தால் உள்ளே இருப்பவாகளின் மனைவி மார்கள், சுகோதரர்கள் உறவினாகள், என்று ஏகப்பட்டவர்கள் உள்ளே உள்ளவர்களை அழைத்து போக வந்து காத்து நிற்கிறார்கள்.... எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டு போட்டதை போட்டடபடி அப்படியே போட்டுவிட்டு வந்து காத்து நிற்கும் பரிதாபமான காட்சி...

எங்களை கண்டதும் மற்றவர்கள் என்ன ஆனார்கள் எப்போது வருவார்கள்?.. என்ற கேள்விகள் மட்டும் தான் எல்லாரிடமும் இருந்து வந்தன. இன்றைக்கு விடுவார்கள் என்று எல்லாருக்கும் ஒரு பொய்யான பதிலையே சொல்லிக்கொண்டு வந்தோம்.... எங்களால் வேறு என்ன செய் முடியும்.

இதன் பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது... எத்தனை நாட்கள் உள்ளே இருந்தார்கள், வைத்தியத்திற்காக தன் பிள்ளைகளுடன் வந்திருந்த தாய், தனது எதிர்காலத்திற்காய் கனடா செல்ல வந்த அந்த இளைஞன்..... என்ன ஆனார்கள் எனபது யாருக்கு தெரியும்.

அன்று நான் வீடு திரும்பியதும் எனக்குள் இனி நமக்கு இலங்கை வேண்டாம், எங்காவது போய்விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். அன்று இரவே எங்கள் ஊருக்கு திரும்பிவிட்டேன். ஒரு மூன்று மதங்கள் வரையில் நான் வீட்டை விட்டு எங்குமே வெளியில் கூட போகவில்லை..... அந்த அதிர்ச்சி தந்த பயத்தில்.

அதன் பிறகு சரியாக இரண்டு மாதங்களில் மிகுந்த முயற்சி செய்து இப்போது நான் செய்யும் தொழிலுக்காக சவுதி அரேபியாவிற்கு வந்த விட்டேன்.....

நண்பர்களே!...
இதில் நான் எதையும் மிகைப்படுத்தி கூறவில்லை, சில வேளை உங்களுக்கு இது சுவராசியம் அற்று இருக்கலாம்.... அல்லது உங்களில் யாருக்காவது ஒருவருக்கு இதை விட கொடுமையான சம்பவங்கள் நடந்திருக்கலாம்.

இந்த பதிவின் நோக்கம்
இலங்கையின் அவசரகால சட்டம் ஒரு சாதாராண தமிழனை, என் போன்ற பல்லாயிரக்கணக்காண தமிழர்கள் வாழ்வை எப்படி பாதிக்கிறது எனபதை காட்டவே!

இந்த சட்டம் நீடிக்கவேண்டுமா?..... இந்த சட்டம் யாருக்காக?.... மக்களை பாதுகாக்க என்ற போர்வையில் மக்களையே பலிகொள்ளும் பெரும்பான்மை அரசியல் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவு வருமா?